கடத்தி-கைதான உதயன் ஆசிரியர் விடுதலை
கொழும்பு: ராணுவத்தினரால் கடத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்ட உதயன் மற்றும் சுடரொளி இதழ்களின் ஆசிரியர் வித்தியாதரன் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி திடீரென வெள்ளை வேனில் வந்த ராணுவத்தினர் வித்தியாதரனை குண்டுக் கட்டாக தூக்கிச் சென்றனர். இதையடுத்து அவரது மனைவி போலீஸில் புகார் கொடுத்தார்.
இந்த நிலையில் வித்தியாதரன் கடத்தப்படவில்லை. கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். கொழும்பில் விடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலில் வித்தியாதரனுக்கு தொடர்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
மேலும், பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்சேவின் உத்தரவின் பேரிலேயே வித்தியாதரன் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் போலீஸ் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் இன்று வித்தியாதரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் மீது எந்தத் தவறும் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதையடுத்து வித்தியாதரனை விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications