கிருஷ்ணசாமிக்கு ஆதரவும் இல்லை-சரத்குமார்
சென்னை: தென்காசியில் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடாது. அதே சமயத்தில் அங்கு போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவும் அளிக்க மாட்டோம் என தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமகவுக்கு தென்காசி உட்பட ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், சமக தாங்கள் தென்காசியில் போட்டியிடப் போவதில்லை என்றும், அதற்கு பதிலாக ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடப் போவதாகவும் அக் கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்தார்.
அதே நேரத்தில் தென்காசியில் மனித நேய மக்கள் கட்சியின் ஆதரவுடன் போட்டியிடும் கிருஷ்ணசாமியை தனது கட்சி ஆதரிக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து தென்காசியில் எதிரெதிர் கொள்கைகளை கொண்ட பாஜக மற்றும் மனித நேய மக்கள் கட்சி இரண்டும் சேர்ந்து பிரசாரம் செய்யும் சூழ்நிலை உருவானது. இந் நிலையில் கிருஷ்ணசாமிக்கு ஆதரவு தரும் முடிவை சரத்குமார் மாற்றியுள்ளார்.
அவர் கூறுகையில்,
சமத்துவ மக்கள கட்சி தென்காசியில் போட்டியிடுவதில்லை என்றும், அங்கு எந்த கட்சிக்கும் ஆதரவு கொடுப்பதில்லை என்றும் முடிவு செய்துள்ளது.
எனவே தென்காசி தொகுதியில் இருக்கும் சமக கட்சி நிர்வாகிகள் பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் போட்டியிடும் நெல்லை தொகுதியிலும், மாநில இளைஞரணி செயலாளர் சாலமன் போட்டியிடும் தூத்துக்குடி தொகுதியிலும், கூட்டணி கட்சியான பாஜகவின் வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடும் கன்னியாகுமரி தொகுதியிலும் தேர்தல் பணி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications