ஜெ மீதான லண்டன் ஹோட்டல் வழக்கு வாபஸ்-சுப்ரீம் கோர்ட் அனுமதி
டெல்லி: லண்டனில் முறைகேடாக ஹோட்டல் வாங்கியதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கை தமிழக அரசு வாபஸ் பெற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில், ஜெயலலிதா மீது பல வழக்குகள் தொடரப்பட்டன. அதில் முதல்வர் பதவியைப் பயன்படுத்தி லண்டனில் ஹோட்டல் வாங்கியது தொடர்பான வழக்கு மற்றும் வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து குவித்த வழக்கு ஆகியவை இரு வழக்குகள்.
இந்த இரண்டு வழக்குகளும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி பெங்களூர் தனி கோர்ட்டுக்கு கடந்த 2003ம் ஆண்டு மாற்றப்பட்டன. இந்த இரு வழக்குகளும் முதலில் தனித் தனியான வழக்குகளாக இருந்தன. ஆனால் இரண்டையும ஒன்றாக விசாரிக்க வேண்டும் என ஜெயலலிதா கோரியதையடுத்து பெங்களூர் தனி கோர்ட் இரண்டையும் ஒன்றாக்கியது.
இந் நிலையில், லண்டன் ஹோட்டல் வழக்குக்குப் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அந்த வழக்கை திரும்பப் பெற விரும்புவதாகவும், அதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரி தமிழக அரசின் சார்பில் இரு வாரங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக அரசு தாக்கல் செய்த மனுவில், லண்டன் ஹோட்டல் வழக்கில் பெங்களூர் கோர்ட்டில் ஆஜராகியுள்ள அரசின் சிறப்பு நீதிபதி பி.வி. ஆச்சார்யா தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் லண்டன் ஹோட்டல் வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை. இந்த
வழக்கின் கேஸ் டைரியை ஆய்வு செய்தபோது 2001ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி புதிய விசாரணை அதிகாரி சுப்புராமன், சிறப்பு நீதிபதியின் அனுமதியைப் பெற்று மேல் விசாரணை நடத்தியுள்ளார்.
அப்போது அவர் விசாரணை நடத்திய அமலாக்கப் பிரிவு துணை இயக்குநர் சுப்ரமணியன் என்பவர், லண்டன் ஹோட்டல் வழக்கில், ஜெயலலிதாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளதாக பதிவு செய்துள்ளார் சுப்புராமன்.
லண்டன் ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் சுப்ரமணியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், லண்டனில் ஒரு வேளை ஜெயலலிதா சொத்து வாங்கியிருந்தாலும் (ஹோட்டல்) கூட அதை நிரூபிப்பது மிகவும் கடினமானதாகும்.
மேலும் இந்த ஹோட்டவை விற்றது, வாங்கியதில் நடந்த பணப் பரிமாற்றத்துக்கான ஆதாரங்களை சேகரிப்பது எளிதல்ல. இவை எல்லாமே வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் மூலம் நடந்துள்ளன.
எனவே இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவது என்பது மிகவம் சிரமமானதாகும். போதிய ஆதாரங்கள் இல்லாததால் இதை வெற்றிகரமாக நடத்த முடியும் என நான் நினைக்கவில்லை என்று ஆச்சார்யா கூறியுள்ளார்.
எனவே இந்த வழக்கை விலக்கிக் கொள்ள பெங்களூர் சிறப்பு அரசு வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும். இதுதொடர்பாக பெங்களூர் தனி நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உரிய அறிவுறுத்தல்களைப் பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி எச்.எஸ்.பெடி, நீதிபதி பி.சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஜெயலலிதா மீதான லண்டன் ஹோட்டல் வழக்கை திரும்பப் பெற தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்தனர்.
அதே நேரத்தில் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கிற்கு விதித்த தடை தொடர்ந்து நீடிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தவிர அவரது தோழி சசிகலா, வி.என்.சுதாகரன், டிடிவி தினகரன், இளவரசி ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வழக்கு வாபஸ்-திமுக போடும் கிடுக்கிப்பிடி!:
ஜெயலலிதா மீதான ஹோட்டல் வழக்கு வாபஸ் பெற்றதன் மூலம் நீண்ட காலமாக பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்குக்கு உயிர் கொடுத்து அதை விரைந்து விசாரணைக்குக் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
திமுகவைப் பொறுத்தவரை லண்டன் ஹோட்டல் வழக்கை விட சொத்துக் குவிப்பு வழக்குதான் முக்கியமானது. இதில் ஜெயலலிதா, சசிகலா, வி.என்.சுதாகரன், டிடிவி தினகரன், இளவரசி ஆகியோருக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதாக திமுக தரப்பு கருதுகிறது.
இதில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டனை கிடைத்தால் ஜெயலலிதாவுக்கு தேர்தலில் போட்டியிடக் கூட பெரும் சிக்கல் ஏற்படும்.