உடனே போரை நிறுத்துங்கள்-அமெரிக்கா கண்டிப்பு
வாஷிங்டன்: இலங்கை அரசு உடனடியாக போரை நிறுத்த வேண்டும். அப்பாவி மக்கள் பலியாவது பெரும் கவலை தருகிறது என்று அமெரிக்க அரசு கூறியுள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முதல் முறையாக அமெரிக்க வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அதில், இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களை கொல்வதை நிறுத்த வேண்டும், போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என கண்டிப்புடன் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை..
பாதுகாப்பு வலயத்தின் மீது தொடர்ந்து எறிகணைத் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக் கொள்ளுமாறு இலங்கை அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல விடாமல் சர்வதேச உதவி அமைப்புகளைத் தடுப்பது, பத்திரிகையாளர்களை செல்ல விடாமல் தடுப்பது ஆகியவற்றையும் இலங்கை அரசு கைவிட வேண்டும்.
இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று அவர்களை சந்திப்பதற்கு அனைத்து உதவி அமைப்புகளையும் இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்.
போரை நிறுத்தாவி்டால் அது இலங்கையின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
போர் அவலம் நீடித்தால், மறு சீரமைப்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்படும். இரு தரப்பினரும் சண்டை போடுவதை கைவிட்டு விட்டு மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல உதவ வேண்டும்.
இதுதொடர்பாக அனைத்து நாடுகளுடனும் இணைந்து அமெரிக்கா பணியாற்ற விரும்புகிறது. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை அமெரிக்கா ஆதரிக்கிறது.
சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை இலங்கை அரசு மதிக்க வேண்டும். அவற்றுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டும். ஆனால் இவற்றை மீறும் வகையில் இலங்கை அரசு தொடர்ந்து நடந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.