ஆந்திராவில் மறுவாக்குப் பதிவு 80 சதவீதம்!
ஹைதராபாத்: ஆந்திராவில் 63 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது. இதில் 80 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் கடந்த 23ம் தேதி நடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில் சில தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து ஆந்திரா தேர்தல் ஆணையாளர் 10 மாவட்டங்களில் உள்ள 63 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டார். நேற்று மறுவாக்குப்பதிவு நடந்தது.
இது குறித்து ஆந்திர தலைமை தேர்தல் அதிகாரி சுப்பா ராவ் கூறுகையில், மறுவாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது. இத்துடன் ஆந்திராவில் வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.
ஓட்டு எண்ணிக்கைக்கான நடவடிக்கைகள் இன்று முதல் துவக்கப்படும். மேற்பார்வையாளர்கள், கட்சிகளின் ஏஜென்ட்கள் ஆகியோர்களை தேர்வு செய்யும் பணியை ஆரம்பித்துள்ளோம்.
பிரகாசம் மாவட்டம் கந்துகூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தியது தொடர்பாக 11 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேரை கைது செய்துள்ளோம். மற்றவர்களை உடனே கைது செய்யும்படி போலீஸ் அதிகாரிகளை கேட்டு கொண்டுள்ளோம்.
ஒரு தொகுதியில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச கட்சியின் ஏஜென்ட்கள் வாக்காளர்களுக்கு பதிலாக வாக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் வாக்காளர்களிடம் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என கேட்டது வீடியோவில் தெளிவாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தி்ல தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். 63 இடங்களில் சராசரியாக 80 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என்றார் அவர்.