இலங்கையில் இனி தாக்குதல் நடக்காது-சிதம்பரம்
டெல்லி: இலங்கையில் போரை நிறுத்துவதாக அந் நாடு அறிவித்துள்ளது பெரும் நிம்மதியைத் தந்துள்ளதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், இலங்கையில் தாக்குதலை நிறுத்தச் செய்ய கடந்த 72 மணி நேரமாக இந்திய உயர் அதிகாரிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர்.
வெளியுறவுத்துறைச செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் மத்திய அரசு எடுத்த தொடர் முயற்சிகளுக்கு பலன் ஏற்பட்டுள்ளது.
தாக்குதலை நிறுத்துவதாக இலங்கை அறிவித்துள்ளது பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக மத்திய அரசு மேலும் பல நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்கும்.
இலங்கை அரசு தந்துள்ள உறுதிமொழியின்படி தமிழர் பகுதிகளில் விமானத் தாக்குதலோ, கன ரக ஆயுதத் தாக்குதலோ நடக்காது என்றார்.
மத்திய அரசுக்கு கருணாநிதி நன்றி:
இந் நிலையில் இலங்கையில் போர் நிறுத்தத்துக்கு நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.