'காங்கிரஸார் வந்தால் செருப்பால் அடிப்போம்'-ஸ்டிக்கர்கள்
கோவை: ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணை போகும் காங்கிரஸார் ஓட்டு கேட்க வந்தால் செருப்பால் அடிப்போம் என்ற வாசகங்கள் இடம் பெற்ற ஸ்டிக்கர்களால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை பூ மார்க்கெட் பகுதியில் நேற்று சிறிதும், பெரிதுமாக ஏராளமான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
அதில், ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணை போகும் காங்கிரஸ் ஓட்டு கேட்டு வீட்டிற்கு வந்தால் செருப்பால் அடிப்போம் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கோவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரபு போட்டியிடுகிறார். அவருக்கு இங்கு கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு நிலவுகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ கோவை தங்கம் (ஜி.கே.வாசன் ஆதரவாளர்), கோவையில் தனது கட்சிக்காக வாக்கு சேகரிக்காமல், அருகில் உள்ள பொள்ளாச்சிக்குப் போய் விட்டார். அங்கு திமுக வேட்பாளர் சண்முகசுந்தரத்தை ஆதரித்துப் பிரசாரம் செய்து வருகிறார்.
அதேபோல எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆதரவாளர்களும் கூட பிரபு மீது காட்டமாக உள்ளனர்.
இந்த நிலையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை வைத்து காங்கிரஸுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதால் பிரபு வட்டாரம் கலங்கிப் போயுள்ளது.