உத்தரவை மீறி தமிழகம் முழுவதும் நடந்த உண்ணாவிரதம்
சென்னை: முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம் இருப்பதை அறிந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அண்ணா சமாதியில் குவிந்தனர். அவர்கள் இலங்கை அதிபருக்கு எதிராகவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷமிட்டபடி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
அதே போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான வேன்கள், லாரிகள், கார்களில் தொண்டர்கள் சென்னைக்கு விரைந்தனர்.
கரூரில் அன்பழகன் உண்ணாவிரதம்..
யாரும் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது என்று கருணாநிதி கூறினாலும் மதுரையில் அழகிரி உண்ணாவிரதம் தொடங்கினார். அதேபோல கரூரில் அமைச்சர் அன்பழகன் தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது.
மதுரையில் அழகிரி...
கருணாநிதி உண்ணாவிரதம் இருப்பதை அறிந்த மதுரை நாடாளுமன்ற வேட்பாளரான அவரது மகன் அழகிரியும் மதுரை மேலமாசி வீதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம்:
அதே போல சேலத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமையிலும், வேலூரில் துரைமுருகன் தலைமையிலும், கோவையில், அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையிலும், திண்டுக்கல்லில் பெரியசாமி தலைமையிலும், திருவாரூரில் அமைச்சர் மதிவாணன் தலைமையிலும், திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையிலும், பட்டுக்கோட்டையில் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம் தலைமையிலும், தஞ்சையில் அமைச்சர் உபயதுல்லா தலைமையிலும் திமுகவினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
நெல்லையில் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் பெரும் திரளான திமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் கருணாநிதி தனது உண்ணாவிரத்தை முடித்துக் கொண்டவுடன் இவர்களும் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.