போர் நிறுத்தமல்ல-மீண்டும் ராஜபக்சே திட்டவட்டம்
டெல்லி: நாங்கள் போர் நிறுத்தத்தை அறிவிக்கவில்லை. புலிகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதே எங்களது முதல் கடமை என்று கூறியுள்ளார் இலங்கை அதிபர் ராஜபக்சே.
இதுகுறித்து சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், விமானத் தாக்குதல்களையும், கனரகர ஆயுதங்களையும் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டோம். ஆனால் இது போர் நிறுத்தம் அல்ல.
புலிகள் வசம் உள்ள தமிழர்களை மீட்பதே எனது முக்கிய கடமை. மக்களுக்கு ராணுவம் உதவி வருகிறது. அப்பாவி மக்களை அவர்களிடமிருந்து நாங்கள் மீட்டு வருகிறோம்.
நாங்கள் கனரக ஆயுதங்களையும், விமானத் தாக்குதல்களையும் பயன்படுத்தவில்லை.
விடுதலைப் புலிகள் இன்னும் குறுகிய இடத்திற்குள்தான் இருக்கிறார்கள் என உளவுத் தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் பிடிபடும் வரை காத்திருப்போம். சரணடையுமாறு அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். ஆனால் இதுவரை அவர்கள் சரணடையவில்லை. அவர்கள் சரணடையாவிட்டால் ராணுவ நடவடிக்கையாக சந்தித்தாக வேண்டும்.
பிரபாகரனைப் பொறுத்தவரை எல்லாம் முடிந்து விட்டது. அவர் சரணடைய வேண்டும். வேறு வழியில்லை. விடுதலைப் புலிகள் வசம் உள்ள கடைசி தமிழனையும் மீட்கும் வரை ராணுவம் போராடும். பிரபாகரனைப் பற்றியோ அல்லது பிறரைப் பற்றியோ எங்களுக்குக் கவலை இல்லை.
பிரபாகரனை உயிருடன் பிடிக்கவே நாங்கள் முயற்சிக்கிறோம். அவர் பிடிபட்டால், முதலில் எங்களது நாட்டில் விசாரணை நடத்துவோம். அவர் செய்த குற்றங்களுக்காக எங்களது நாட்டில் அவருக்குத் தண்டனை தருவோம். வேறு யாராவது அவரை விசாரணைக்கு விரும்பினால் தாராளமாக அழைத்துச் செல்லலாம்.
இந்தியாவுக்கு பிரபாகரனை விசாரணைக்கு அழைக்க உரிமை உள்ளது. இந்தியாவின் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவரான ராஜீவ் காந்தியைக் கொன்றவர் பிரபாகரன். இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பில் யார் இருந்தாலும் பிரபாகரனை விசாரிக்க வேண்டும் என்றார் ராஜபக்சே.