கர்நாடக முதல்வர் எதியூரப்பா மீது செருப்பு வீச்சு
ஹசன்: கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டம் சென்னராயப்பட்டனம் என்ற இடத்தில் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் எதியூரப்பா மீது செருப்பு வீசப்பட்டது.
ஆனால் எதியூரப்பா மீது செருப்பு விழவில்லை. மேடைக்கு முன்பாகவே அது விழுந்து விட்டது. செருப்பு வீசியவரின் பெயர் சந்துரு. இவர் தேவெ கெளடா வாழ்க என்று கூறியபடி செருப்பை வீசினார்.
சந்துரு, ஹசன் மாவட்டம் ஹோலேநரசிபூர் பகுதியைச் சேர்ந்தவர். மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்தவர். அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கு முன்பு அத்வானி, ப.சிதம்பரம், மன்மோகன் சிங் ஆகியோரை நோக்கி ஷூக்கள், செருப்பு ஆகியவை வீசப்பட்டன. அந்த செயலில் ஈடுபட்டவர்களை மேற்கண்ட தலைவர்கள் மன்னித்து விட்டு விடும்படி கூறினர்.
ஆனால் எதியூரப்பா அப்படி விடவில்லை. தன்னை நோக்கி செருப்பு வீசிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
மேலும், அவர் பேசுகையில், இது ஒரு பேஷனாகி விட்டது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு என் மீது செருப்பு வீசியவரை கடுமையாக தண்டிப்பதுதான் ஒரே வழி என்றார் ஆவேசமாக.