ஒரே நாளில் திருச்சி வரும் கருணாநிதி, ஜெ
திருச்சி: தமிழகத்தின் இரு பெரும் தலைவர்களும், இரு பெரும் துருவங்களுமான முதல்வர் கருணாநிதியும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் மே 1ம் தேதி திருச்சி வருகின்றனர். இதையடு்த்து அங்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் 13ம் தேதி நடக்கிறது. இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருப்பதால் தேர்தல் பிரசாரத்தில் அனல் பறக்கிறது.
திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் அக்கட்சியை சேர்ந்த ப.குமார் போட்டியிடுகிறார்.
தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா கடந்த சில நாட்களாக ஹெலிகாப்டரில் பறந்து பறந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
பிரசாரத்துக்கு நடுவே நாளை திருச்சி வரும் அவர், அங்கிருந்து தஞ்சை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூருக்கு சென்று பிரசாரம் செயகிறார். வரும் 3ம் தேதி வரை அப்பகுதிகளில் பிரசாரம் செய்யும் அவர் தினமும் இரவு தங்குவதற்கு ஹெலிகாப்டரில் திருச்சி வந்து சங்கம் ஹோட்டலில் ஓய்வெடுக்கிறார்.
இந்நிலையில் முதல்வர் கருணாநிதி உடல்நலக் கோளாறு காரணமாக முக்கிய தொகுதிகளில் மட்டும் பிரச்சாரம் செய்ய முடிவெடுத்துள்ளார். அவர் மே 1ம் தேதி திருச்சியில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
இதற்காக மலைக்கோட்டை எக்ஸ்பிரசில் ரயிலில் வரும் அவர் மாலை 6 மணிக்கு தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
மே 1ம் தேதி இரு பெரும் திராவிட கட்சிகளின் தலைவர்களும் திருச்சியில் இருப்பதால் அங்கு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.