மூன்றாவது அணியே ஆட்சியமைக்கும்-சிபிஎம்
கொல்கத்தா: வரும் நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும். அதற்கான அனுபவம் இடதுசாரி கட்சிகளுக்கு இருக்கிறது என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் பிமன் போஸ்.
இது குறித்து அவர் கூறுகையில்,
நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி வெற்றி பெறும். மூன்றாவது அணி என்பது கட்சிகளின் கூட்டம் என்று யாரும் நினைக்க வேண்டாம். இந்த அணியில் இருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் இடையில் குறைந்தபட்ச பொது திட்டம் ஒன்று நிச்சயம் இருக்கும். அதை அனைத்து கட்சிகளும் நிச்சயம் ஏற்கும்.
இது சாத்தியமான விஷயம் தான். ஏனென்றால் மேற்கு வங்கத்தில் நாங்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக 9 கட்சிகளுடன் இணைந்து ஆட்சி நடத்தி வருகிறோம். மேற்கு வங்கத்தில் இடதுசாரி என்பது ஒரு கட்சிக்கு மேலானது. ஆனால், ஒரு கூட்டணியை விட சற்று குறைவனது என விளக்கம் தரலாம்.
இந்த மேற்கு வங்க அனுபவத்தை நாங்கள் மூன்றாவது அணியில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். மத்தியில் நீண்ட காலம் நீடிக்கும் ஆட்சியை எங்களால் உருவாக்க முடியும்.
பாஜக நாட்டை பிளவுப்படுத்தும் கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. டார்ஜலிங் தொகுதியில் கூர்கா ஜன்முக்தி முர்ச்சாவுடன் கூட்டணி சேர்ந்திருப்பது கண்டித்தக்கது என்றார் பிமன் போஸ்.