சசிகலாவின் உறவினர் ஸ்கேன் மையத்தில் திடீர் ரெய்டு - பணம் பதுக்கலா?
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினரான டாக்டர் வெங்கடேஷ் நடத்தி வரும் ஸ்கேன் மையத்தில், வாககாளர்களுக்குத் தர பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸார் அங்கு சோதனை நடத்தினர்.
ஆனால் இந்த சோதனையில் எந்தப் பணமும் சிக்கவில்லையாம்.
ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் டாக்டர் வெங்கடேஷின் லிபர்ட்டி ஸ்கேன் சென்டர் உள்ளது. நேற்று காலை இங்கு துணை ஆணையர் மவுரியா தலைமையிலான போலீஸ் படை வந்தது.
மையத்தில் சோதனை நடத்திய பின்னர் போலீஸார் திரும்பிச் சென்றனர்.
அதேபோல கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள வெங்கடேஷின் வீட்டுக்கும் போலீஸ் படை போனது. ஆனால் அங்கு வீடு பூட்டிக் கிடந்ததால் சோதனை போடாமல் திரும்பி விட்டனர்.
வாக்காளர்குக்குப் பணம் தருவதற்காக பெருமளவிலான பணம் ஸ்கேன் மையத்தில் பதுக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்தே போலீஸார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் சோதனையில் எதுவும் சிக்கவில்லையாம்.