கருணாநிதி-ராஜபக்சே கூட்டு சதி: ஜெயலலிதா
நாமக்கல்: தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ராஜபக்சேவுடன் கருணாநிதி சதித் திட்டம் தீட்டியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து எனக்கு தகவல்கள் வந்துள்ளன என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.
நாமக்கல்லில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகையில்,
ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லப் போகிறேன். கவனமாகக் கேளுங்கள். கருணாநிதி- ராஜபக்சேவின் கூட்டு சதித் திட்டத்தைப் பற்றி கிடைத்த தகவலை, நான் உங்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கருணாநிதி ராஜபக்சேவுடன் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து எனக்கு தகவல்கள் வந்துள்ளன.
அதாவது கருணாநிதி ராஜபக்சேவுடன் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். "இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. தனி ஈழம் அமைப்பேன் என்று அவர் தெரிவித்து விட்டதால், ஜெயலலிதாவுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது. நாளைக்கு அவர் சொல்கிறபடி கேட்கும் மத்திய அரசு அமைந்து விட்டால், இலங்கைக்கு ராணுவத்தை அனுப்புவார் ஜெயலலிதா.
'விருப்பம் போல தமிழர்களைக் கொல்லுங்கள்..'
ஜெயலலிதா சொன்னால் செய்து விடுவார். அவர் உறுதியான முடிவை எடுக்கக் கூடியவர். பிறகு உங்களுக்குத் தான் பிரச்சினை. எனவே அப்படி நடக்காமல் இருக்க நான் சொல்வதை கேளுங்கள். தேர்தல் நடக்கும் நாளான மே மாதம் 13ம் தேதி வரை உண்மையாகவே போர் நிறுத்தம் செய்யுங்கள். அப்பொழுது தான் நான் வெற்றி பெற முடியும்.
நான் வெற்றி பெற்று என்னுடைய தயவில் மீண்டும் மத்திய அரசு அமைந்தால், நீங்கள் இலங்கைத் தமிழர்களை உங்கள் விருப்பம் போல் எளிதாக ஒழித்துக் கட்டிவிடலாம். நீங்கள் எனக்கு உதவினால், நான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.
"எனவே, உங்களுக்குப் பிரச்சினை வராமல் தடுக்க, மே மாதம் 13ம் தேதி வரை, போர் நடத்தாமல் பொறுத்து இருங்கள். இங்கே தேர்தல் முடிந்த உடன், உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்" என்று கருணாநிதி ராஜபக்சேவிடம் பேசி இருப்பதாக நம்பகமான தகவல்கள் வந்துள்ளன.
தன் பதவி பறிபோகிறது என்றால் எதையும் துணிவுடன் செய்வார் கருணாநிதி. கருணாநிதியின் தன்னலம் குறித்து நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
எனவே, வருகின்ற தேர்தலில் தமிழினத் துரோகி கருணாநிதிக்கு மீண்டும் எழுந்திருக்க முடியாதபடி மறுபடியும் தலைதூக்க முடியாதபடி நீங்கள் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் இரு கரம் கூப்பி, வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.