மாற்றி மாற்றி ஆட்சி செய்த கருணாநிதி, ஜெ. மக்களுக்கு என்ன செய்தார்கள் - விஜயகாந்த் கேள்வி
காஞ்சிபுரம்: கருணாநிதியும், ஜெயலலிதாவும் மாற்றி மாற்றி மத்திய அரசுடன் கூட்டணி வைத்து ஆட்சி புரிந்தார்களே, அவர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள், விவசாயிகளுக்காக என்ன செய்தார்கள் என்று கேட்டுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
காஞ்சீபுரம் (தனி) தொகுதி தேமுதிக வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆரித்து திருக்கழுக்குன்றத்தில் விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தின்போது அவர் பேசுகையில், திருக்கழுக்குன்றத்திற்கு ஒரு சிறப்பு உள்ளது. இங்குதான் முதல் முதலாக எம்.ஜி.ஆர். தி.மு.க.விடம் கணக்கு கேட்டார். அதன்பின்தான் அ.தி.மு.க. உருவானது.
கருணாநிதியும், ஜெயலலிதாவும் மாற்றி மாற்றி 10 ஆண்டுகள், 5 ஆண்டுகள் மத்திய அரசுடன் கூட்டணி வைத்து ஆட்சி செய்தார்கள். இவர்கள் தமிழ்நாட்டுக்காக என்ன செய்தார்கள்? 70 சதவீதம் வாழும் விவசாயிகளுக்கு என்ன செய்தார்கள்?.
நான் சினிமா மூலம் சம்பாதித்த சொந்த பணத்தின் மூலம் வருடா வருடம் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.25 லட்சம் செலவு செய்து வருகிறேன். ரூ.11/2 கோடியில் ஆங்காங்கே கம்ப்யூட்டர் நிறுவனங்கள் தொடங்கி மிக குறைந்த கட்டணத்தில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறேன்.
தே.மு.தி.க. வெற்றி பெற்றால் படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க கண்டிப்பாக பாடுபடுவேன். லஞ்சத்தை ஒழிப்பேன், மணல் கொள்ளையை தடுப்பேன் என்றார் விஜயகாந்த்.