தென்காசி-'உள்ளடியால்' உதறலில் காங்கிரஸ்
தென்காசி: தென்காசி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி மோதல் வெடித்துள்ளது. இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்களது வெற்றி என்ற உற்சாகத்தில் சுறுசுறுப்பாக வேலை பார்த்து வருகின்றனர்.
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் லிங்கமும், காங்கிரஸ் சார்பில் வெள்ளைப்பாண்டியும், தேமுதிக சார்பில் இன்பராஜூம் மற்றும் புதிய தமிழகம் சார்பில் அதன் தலைவர் கிருஷ்ணசாமியும் போட்டியிடுவதால் வெற்றி யாருக்கு என்பது கணிக்கமுடியாத அளவுக்கு போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் தென்காசியில் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதல் அக்கட்சி தொண்டர்களை கவலையடைய செய்துள்ளது.
தென்காசி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நாள் முதலே இந்த கோஷ்டி மோதல் தொடங்கிவிட்டது. கட்சி பிரமுகர்கள் ஆளுக்கொரு கோஷ்டியாக பிரிந்து கொண்டு எனக்கு, உனக்கு என தேர்தலில் சீட் கேட்டு கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பி்ன்னர் ஒருவழியாக வெள்ளைப்பாண்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் தென்காசி தொகுதிகுட்பட்ட கடையநல்லூர், தென்காசி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளில் உள்ள காங்கிரசார் வாசன் கோஷ்டி, இளங்கோவன் கோஷ்டி என இரண்டாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
இதில் வாசன் கோஷ்டிக்கு பீட்டர் அல்போன்சும், இளங்கோவன் கோஷ்டிக்கு நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொடிக்குறிச்சி முத்தையாவும் தலைமையேற்று உள்ளனர். இவர்கள் இருவரும் எலியும், பூனையுமாக இருப்பதால் தேர்தல் பிரசார பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
பீட்டர் அல்போன்சுக்கும், கொடிக்குறிச்சி முத்தையாவுக்கும் இடையே உள்ள பிரச்சினை ஊர் அறிந்தது. 2006 சட்டசபை தேர்தலில் பீட்டர் அல்போன்சுக்கு எதிராக கடையநல்லூர் தொகுதியில் பிஎஸ் பாண்டியன் என்பவரை முத்தையா போட்டி வேட்பாளராக நிறுத்தி, பிரசாரம் செய்தார். இதனால் இருவருக்கும் இடையே அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இந்த பிரச்சினை இன்று வரை தொடர்வதாகவும். மேலும், வெள்ளைப்பாண்டி பீட்டர் அல்போன்சின் ஆள் என்பதால் அவருக்கு முத்தையா ஆதரவாளர்கள் பிரசாரம் செய்வதில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் வெள்ளைப்பாண்டி திமுகவினரை மட்டுமே நம்பியிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், தொகுதியில் 1977 முதல் 1996 வரை தொடர்ந்து 6 முறை எம்.பி.யாக வலம் வந்து தென்காசியை காங்கிரஸ் கோட்டையாக வைத்திருந்த அமைச்சர் அருணாசலத்தையோ உட்கட்சி பூசல் காரணமாக இத்தொகுதியினர் தோற்கடித்திருப்பதால், வெள்ளைப்பாண்டி கலக்கத்தில் இருக்கிறார்.
இதனால் அதிமுக கூட்டணியில் களமிறங்கியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லிங்கம், வெற்றி உறுதி என்ற நம்பிக்கையில் செம குஷியில் தேர்தல் பணிகளை செய்து வருகிறார்.