ரயி்ல் டிரைவர்-மெக்கானிக் அலட்சியமே காரணம்
சென்னை: சென்னையில் ரயிலைக் கடத்தி நடத்தப்பட்ட விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் விசாரணை தொடங்கியுள்ளது.
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட ரயில்வே தெற்கு வட்ட பாதுகாப்பு கமிஷனர் கே.ஜே.எஸ்.நாயுடு தலைமையில் அதிகாரிகள் குழு இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
சம்பவம் நடந்த வியாசர்பாடி ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட நாயுடு பின்னர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மர்ம நபர் இயக்கிய ரயில் நிறுத்தப்பட்டிருந்த 14வது பிளாட்பாரத்தை பார்வையிட்டு, மின்சார ரயில் என்ஜினையும் பார்வையிட்டார். பின்னர் டிரைவர்கள் ஓய்வு அறையில் உள்ள சுவாச பரிசோதனைக் கருவியை சோதனையிட்டார்.
ரயிலை இயக்கும் முன்பும், பணி முடிந்த பிறகும் இந்தக் கருவியில் டிரைவர்கள் ஊத வேண்டும். மது அருந்தியிருந்தால் அதை இக் கருவி பதிவு செய்யும்.
அதே போல கண்ட்ரோல் கேபினுக்கு சென்று ரயிலை வேறு பாதைக்கு மாற்றிவிடும் பாயின்ட் மாற்றும் கருவியையும் பார்வையிட்டார்.
ரயில் கடத்தப்படும் போது தண்டவாளம் எந்த திசைக்கு திருப்பப்பட்டிருந்தது?, மர்ம மனிதன் பாயின்ட்டை மாற்றிவிட்டு ரயிலைக் கடத்தினானா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினார்.
சென்டிரல் ரயில் நிலையத்தில் டிரைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய சர்வீஸ் ரிஜிஸ்டர் 2005ம் ஆண்டில் இருந்து பராமரிக்கப்படுகிறது. ஓய்வு பெற்ற டிரைவர்கள், பணி நீக்கம் அல்லது டிஸ்மிஸ் செய்யப்பட்ட டிரைவர்கள் புகைப்படங்களும் இதில் இடம் பெற வேண்டுமாம். ஆனால், அவை முழுமையாக இடம் பெறவில்லை.
பொதுவாக, ஒரு ரயிலை இயக்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே டிரைவர் வந்து என்ஜின் அறையில் காத்திருக்க வேண்டும் என்று விதி உள்ளது. அங்கிருந்து எங்கும் நகரக்கூடாது. ஆனால், இதை பெரும்பாலான டிரைவர்கள் கண்டுகொள்வதில்லை.
கடத்தப்பட்ட ரயிலின் டிரைவர் கருணாநிதி என்ஜினை விட்டுவிட்டு எங்கேயோ போய்விட்டார். இது குறித்து அவரிடம் போலீசார் விசாரித்தபோது டீ குடிக்க போனேன், டாய்லெட் போனேன், அதிகாரியை பார்க்கப் பேனேன் என்று நினைத்து நினைத்து ஒன்றை சொல்கிறாராம்.
அதே போல ஷெட்டில் இருந்து ரயிலை எடுத்து வந்து டிரைவரிடம் ஒப்படைகேக வேண்டியது மெக்கானிக்கின் வேலையாகும். ஷெட்டிலிருந்து ரயில் நிலையத்துக்குள் வந்தவுடன் ரயிலை இயக்கப் பயன்படும் 4 சாவிகளையும் மெக்கானிக் தனது கையில் வைத்திருந்து டிரைவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஆனால் இந்த விஷயத்தில் மெக்கானிக் தேவசகாயம் மிகவும் கவனக்குறைவாக டிரைவரே இல்லாத என்ஜினில் 4 சாவிகளையும் பொருத்திவிட்டு ஸ்டார்ட் செய்யத் தயார் நிலையில் வைத்து விட்டு போய்விட்டார்.
இதனால் தான் மர்ம நபர் ரயிலை மிக எளிதாக இயக்கிச் சென்றுள்ளான்.












Click it and Unblock the Notifications