பாதுகாப்பு வளையத்தில் விமான தாக்குதல்- யு.எஸ். செயற்கைக்கோள் படங்கள் 'லீக்'
வாஷிங்டன்: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் வாழும் பகுதிகளலும் பாதுகாப்பு வளையம் என்று ராணுவம் சொன்ன இடங்களிலும் விமானப் படையின் விமானங்கள் கண்மூடித்தனமாக குண்டு வீசித் தாக்கியதை அமெரிக்க செயற்கைக் கோள்கள் எடுத்த படங்கள் உறுதி செய்துள்ளன.இது தொடர்பான படங்களை அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் 'லீக்' செய்துள்ளது.
ஐ.நாவுக்கு அமெரிக்கா தந்துள்ள இந்தப் படங்கள் மூலம் இலங்கை அரசும் ராணுவமும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களிலும், வார் கிரைம் எனப்படும் போர் நேர கொடும் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Unosat என்ற செயற்கைக் கோள் எடுத்த படங்களுடன் இது தொடர்பான அறிக்கையை ஐ.நாவிடம் அமெரிக்கா தந்துள்ளது.
பாதுகாப்பு வளையம் என்று ராணுவமும் இலங்கை அரசும் கூறியதை நம்பி அங்கு குவிந்த சுமார் 1.5 லட்சம் தமிழர்கள் மீது விமானங்கள் மூலம் இலங்கை தாக்குதல் நடத்தியது. குறிப்பாக 3.5 சதுர கி.மீ சுற்றுவட்டாரத்துக்குள் பயங்கர குண்டுவீச்சு தாக்குதல் நடந்துள்ளது.
ஆனால், கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதலே இந்தப் பகுதியை பாதுகாப்பு வளையம் என அறிவித்ததோடு, இங்கு எந்த தாக்குதலையும் நடத்தவில்லை என ராணுவம் கூறி வந்தது, இப்போதும் கூறி வருகிறது.
ஆனால், ஏப்ரல் மாதத்தின் 19ம் தேதி வரை இந்தத் தாக்குதல் நடந்துள்ளதை செயற்கைக் கோள் படங்கள் உறுதி செய்துள்ளன.
இந்தப் படங்களை ஐ.நாவிடம் தருவதற்காக மட்டுமே அமெரிக்க பாதுகாப்புத்துறை வெளியிட்டது. ஆனால், அது வெளியிலும் லீக் ஆகிவிட்டது.
இந்தப் படங்கள் மூலம் இத்தனை காலமாக இலங்கை அரசு உலக நாடுகளை பொய் சொல்லி ஏமாற்றி வந்துள்ளது உறுதியாகிவிட்டதாக அமெரிக்க மனித உரிமை இயக்கத்தின் தலைவரான பீட்டர் பெளஸ்கார்ட் கூறியுள்ளார்.
இது குறித்து கருத்துத் தெரிவிக்க இலங்கை விமானப் படை மறுத்துவிட்டது.