இந்தியாவில் ஸ்வைன் ப்ளூ காய்ச்சல் இல்லை - டாக்டர்கள்
அமெரிக்காவின் டெக்சாஸிலிருந்து டெல்லிக்கு திரும்பிய 25 வயது இளைஞருக்கு ஸ்வைன் ப்ளூ காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டதால் அவர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவர் 15 நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்குத் திரும்பினார். இந்த நிலையில் எச்1என்1 (ஸ்வைன் ப்ளூ காய்ச்சல்) அறிகுறிகள் அவருக்கு தென்பட்டதால் டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த இளைஞர் டெல்லிக்கு அருகில் உள்ள காஸியாபாத்தைச் சேர்ந்தவர். நேற்று மாலை இவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அவரை தற்போது டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஏப்ரல் 19ம் தேதி அவர் டெல்லி வந்து சேர்ந்தார். ஏப்ரல் 24ம் தேதி அவருக்கு காய்ச்சல் வந்தது. 2 நாட்களுக்கு காய்ச்சல் இருந்துள்ளது.
இந்த நிலையில்தான் ஸ்வைன் ப்ளூ குறித்து பத்திரிகை செய்திகளைப் பார்த்த அவர் தானாகவே மருத்துவமனைக்கு வந்தார். தற்போது தனி வார்டில் வைத்து அவரை டாக்டர்கள் பரிசோதித்து வருகின்றனர்.
அவருக்கு அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல ஸ்வைன் ப்ளூ பீதி காரணமாக நேற்று மட்டும் நான்கு பேர் இங்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால் அவர்கள் யாருக்குமே ஸ்வைன் ப்ளூ இல்லை என்பது தெரிய வந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, ஸ்வைன் ப்ளூ பரவத் தொடங்கியதற்குப் பின்னர் வெளிநாடுகளிலிருந்து வந்த 2000க்கும் மேற்பட்ட விமான பயணிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாருக்குமே ஸ்வைன் ப்ளூ பாதிப்பு இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் வேறு எங்கும் ஸ்வைன் ப்ளூ காய்ச்சல் பரவியுள்ளதாகவும் தகவல் இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை 365 பலி
இதற்கிடையே ஸ்வைன் ப்ளூ காய்ச்சலுக்கு இதுவரை உலகம் முழுவதும் 365 பேர் பலியாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 13 நாடுகளை ஸ்வைன் ப்ளூ தாக்கியுள்ளதாகவும், அது தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்காவில் பரவி வந்த ஸ்வைன் ப்ளூ தற்போது ஆசிய நாடுகளுக்குள்ளும் புகுந்துள்ளது. ஹாங்காங்கில் ஸ்வைன் ப்ளூ பரவியுள்ளதால் பிற ஆசிய நாடுகள் பீதியில் ஆழ்ந்துள்ளன.
அமெரிக்காவில் 400 பள்ளிகள் மூடல்...
இந்த நிலையில், ஸ்வைன் ப்ளூ வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்காவில் 400க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் 19 மாகாணங்களில் ஸ்வைன் ப்ளூ பாதிப்பு உள்ளது.
வெள்ளிக்கிழமையன்று ஸ்வைன் பாதி்ப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 17 மாகாணங்களைச் சேர்ந்த 433 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
மேலும், ஸ்வைன் பீதியால் பயணிகள் வரத்து குறைந்து போனதால், யுனைட்டெட் ஏர்லைன்ஸ் மற்றும் கான்டினென்டல் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள், மெக்சிகோவுக்கான விமான சேவையை ரத்து செய்துள்ளன.