வருண் காந்தியின் பரோல் மே 14 வரை நீட்டிப்பு
டெல்லி: வருண் காந்தியின் பரோல் மே 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடுவதாலும், பிரசாரத்திற்காகவும் வருண் காந்திக்கு நேற்று வரை உச்சநீதிமன்றம் பரோல் அளித்திருந்தது.
இந்த நிலையில் பரோலை நீட்டிக்க வேண்டும் என்று கோரி அவரது வக்கீல்கள் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்து மனு தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம் மே 14ம் தேதி வரை பரோலை நீட்டித்து நேற்று உத்தரவிட்டது.
கடந்த இரு வாரங்களில் 20 கூட்டங்களில் கலந்து கொண்டு பேசியுள்ளார் வருண் காந்தி.
மத வெறியைத் தூண்டும் வகையிலோ, கலவரத்தைத் தூண்டும் வகையிலோ எதுவும் பேச மாட்டேன் என உறுதி மொழி அளித்து விட்டு வருண் காந்தி பரோலில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேடை சரிந்தது - விழுந்தார் வருண்..
இதற்கிடையே, நேற்று பிலிபித் தொகுதியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த வருண் காந்தி, மேடை சரிந்து கீழே விழுந்தார். இருப்பினும் அவருக்குப் பெரிய அளவில் அடிபடவில்லை. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.