முன்னாள் எல்டிடிஇ தளபதி மாத்தையாவின் குடும்பத்தினர் அரசுப் பகுதிக்கு தப்பினர்
முல்லைத்தீவு: விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவரும், இந்தியாவுக்கு உளவு கூறியதற்காக புலிகள் இயக்கத்தினரால் மரண தண்டனை விதிக்கப்பட்டவருமான மாத்தையாவின் மனைவி மற்றும் குழந்தைகள் விடுதலைப் புலிகள் பகுதியிலிருந்து தப்பி அரசுப் பகுதிக்கு ஓடியுள்ளனர்.
இந்திய அமைதி காக்கும் படைக்கு உளவு கூறியவர் என்ற குற்றச்சாட்டின் கீழ் மாத்தையா மரண தண்டனை விதிக்கப்பட்டவர் என்பது நினைவிருக்கலாம்.
மாத்தையாவின் முழுப் பெயர் கோபாலசாமி மகேந்திரராஜா. இவருடைய மனைவியும், 3 குழந்தைகளும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அவர்கள் அரசுப் பகுதிக்கு தப்பி வந்தனர்.
இதுகுறித்து மாத்தையாவின் மனைவி ராணுவ அதிகாரிகளிடம் கூறுகையில், நாங்கள் தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இல்லை. இருப்பினும் விடுதலைப் புலிகள் இயக்கம் எங்களுக்கு மாதந்தோறும், இழப்பீட்டுத் தொகை ஒன்றை கொடுத்து வந்தது என்று கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 2ம் நிலைத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் மாத்தையா. பிரபாகரனின் வலது கரம் போல செயல்பட்டவர் அவர்.
1956ம் ஆண்டு பிறந்த மாத்தையா, 1978ம் புலிகள் இயக்கத்தில் இணைந்தார். தனது மரணம் வரை புலிகள் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர்.
ஆனால் 1993ம் ஆண்டு இவர் இந்திய ராணுவத்திற்கு உளவு கூறியதாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விடுதலைப் புலிகள் கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டு இவருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது. 1994ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பிரேமதாசா அதிபராக இருந்தபோது ஆன்டன் பாலசிங்கத்துடன் இணைந்து, இலங்கை அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார் மாத்தையா. பிரேமதாசா 1993ம் ஆண்டு கொழும்பில் நடந்த மே தினப் பேரணியின்போது மனித வெடிகுண்டுத் தாக்குதலுக்குப் பலியானார்.
விடுதலைப் புலிகள் பிரிவின் அரசியல் பிரிவான மக்கள் விடுதலைப் புலிகள் முன்னணியின் தலைவராகவும் இருந்துள்ளார் மாத்தையா.












Click it and Unblock the Notifications