ரூ.3 முதல் 5 லட்சம் விலையில் இனி நானோ வீடுகள்!!
பெங்களூர்: நானோ கார் தெரியும் உங்களுக்கு... நானோ வீடு தெரியுமா...! ரூபாய் ஒரு லட்சத்துக்கு மலிவு விலையில் ஏழைகளுக்கும் கார் சாத்தியமானதைப் போல, குறைந்த விலையில் ஏழை மக்களுக்கும் சொந்த வீடு தருவதுதான் 'நானோ வீடு' திட்டம்.
இந்த திட்டப்படி இரு விலைகளில் புதிய வீடுகள் உருவாக்கப்பட உள்ளன. ரூ.3 லட்சம் விலையில் 3000 வீடுகளும், ரூ.5 லட்சத்திற்கு 3000 வீடுகளும் உருவாகின்றன. சம்பளம் ரூ.6500 லிருந்து 13000க்குள் இருந்தால் போதும்.
மாதம் ரூ.3000 மட்டுமே தவணைத் தொகை செலுத்த வேண்டியிருக்கும்.
முதல்வகை வீடுகள் 250 சதுர அடியில் அமைந்திருக்கும். அடுத்த வகை 400 சதுர அடியில் அமைந்திருக்கும்.
சரி... இந்த வீடுகள் எந்த ஊரில் வரப் போகின்றன...?
நிச்சயம் சென்னையில் அல்ல... பெங்களூரில்!
ஜனக்ரஹா, எம்பஸிஸ், மற்றும் சிஎஸ்ஸி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்தத் திட்டத்துக்கு இன்னும் அரசு ஒப்புதல் வழங்கப்படவில்லை. ஆனால் பொதுமக்கள் ஏக ஆர்வமாகி, விசாரிப்புகளை ஆரம்பித்து விட்டார்களாம்.
குறைந்த விலை வீடுகள் என்பதால் குறைத்து மதிப்பிட்டு விட வேண்டாம் என்றும், அந்த வீடுகள் அமைந்துள்ள வளாகத்துக்குள் நீச்சல் குளம், விளையாட்டுத் திடல், பூங்கா என சொகுசு வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தித் தர உள்ளதாகவும், இதற்கு கூடுதலாக எந்த விலையும் வைக்கவில்லை என்றும் சிஎஸ்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
விரைவில் இந்த திட்டத்தை சென்னைக்கும் விரிவு படுத்தப்போவதாக கூறியுள்ளன இந்த மூன்று நிறுவனங்களும்.