இனப்படுகொலையை அம்பலப்படுத்துவதால் ஆத்திரம் - ஐ.நா. தூதரை வெளியேற்ற இலங்கை திட்டம்
ஐ.நா.வின் தூதரையே வெளியேற்றினால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதால், அதுகுறித்து நிதானித்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாம் இலங்கை அரசு.
இலங்கைக்கான ஐ.நா. உறைவிட ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார் நீல் பூனே. வன்னிப் பிரதேசத்தில் நடந்து வரும் இனப்படுகொலை தொடர்பாக பல்வேறு புள்ளி விவரத் தகவல்களை இவர் வெளியிட்டு இலங்கை அரசின் இனப்படுகொலையை வெளி உலகுக்கு அம்பலப்படுத்தி வருகிறார்.
இதனால் கடுப்பாகியுள்ளது இலங்கை அரசு. மீடியாக்களுக்கு பூனேதான் அனைத்து விவரங்களையும் வெளிப்படுத்துவதாக கூறி அவரை நாட்டை விட்டே வெளியேற்ற திட்டமிட்டுள்ளது இலங்கை அரசு.
சமீபத்தில், இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்கள் குறித்த பட்டியலை பூனே, மேற்கத்திய நாடுகளின் தூதரகங்களுக்கு அனுப்பினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
பின்னர் மீடியாக்களிலும் இந்த அறிக்கை வெளியாகியது. அந்த அறிக்கையில், மூன்று மாதங்களில் மட்டும் 6500 தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 13 ஆயிரம் பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை காட்டி, இங்கிலாந்து, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கொழும்பு வந்திருந்தபோது இலங்கை அரசிடம் விளக்கம் கேட்டனர். இது இலங்கையை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது.
இதையடுத்து பூனேவை நேரில் அழைத்த இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமா, எப்படி உறுதிப்படுத்தப்பட்ட சாவுகள் என்று கூறியுள்ளீர்கள் என்று கேட்டுள்ளார்.
இதற்கு பூனே அளித்த பதிலில், விடுதலைப் புலிகள் வசம் உள்ள பகுதிகளில் பணியாற்றும் மருத்துவமனைகளைச் சேர்ந்த 2 மூத்த அரசு டாக்டர்கள்தான் இந்த புள்ளி விவரங்களை தன்னிடம் அளித்ததாக பதிலளித்துள்ளார்.
ஆனால் இதை பொகல்லகாமா ஏற்றுக் கொள்ளவில்லையாம். தங்கள் வசம் உள்ள பகுதிகளில் பணியாற்றும் டாக்டர்களை புலிகள் நிர்ப்பந்தப்படுத்தி இவ்வாறு கூற வைத்திருக்கலாமே என்று கேட்டுள்ளார்.
இதற்கும் பூனே விளக்கம் அளித்துள்ளார்.
பூனே மூலம் இனப்படுகொலை குறித்த ஆதாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி வருவதால் இலங்கை அரசு அதிருப்தி அடைந்துள்ளது.
எப்படியாவது பூனேவை நாட்டை விட்டு வெளியேற்றி விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளதாம் இலங்கை அரசு. ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதால் நிதானித்து நடவடிக்கை மேற்கொள்ள அது திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே லட்சுமண் கதிர்காமர் வெளியுறவு அமைச்சராக இருந்தபோதும், 2 முறை ஐ.நா. உறைவிட ஒருங்கிணைப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.