கரூர் திமுக வேட்பாளர் கார் கண்ணாடி உடைப்பு
கரூர்: நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தி்ன் போது கரூர் திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமியின் கார் கண்ணாடியை அதிமுகவைச் சேர்ந்த சிலர் உடைத்தனர்.
திமுக சார்பில் கரூர் தொகுதியில் நடப்பு எம்.பி.யும், திமுக வேட்பாளருமான கே.சி.பழனிசாமி போட்டியிடுகிறார். வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருப்பதால் தொகுதியில் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், வேடசந்தூரில் உள்ள நிர்வாகிகளிடம் கட்சி கொடி, பேனர்கள் ஆகியவற்றை பழனிசாமியின் கார் டிரைவர் வீரப்பன் கொடுத்து விட்டு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது மலைக்கோவில் அருகில் உள்ள எரியோடு பகுதியில் கார் மீது மர்ம கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் கார் கண்ணாடி உடைந்தது.
இது குறித்து கார் டிரைவர் வீரப்பன் எரியோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அதிமுக விவசாய அணி செயலாளர் ராஜ்மோகன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் இந்த பகுதியில் திமுக, அதிமுக மோதல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பதட்டம் நீடிக்கின்றது. இதனை கருத்தில் கொண்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.