பிரசாரக் கூட்டத்தி்ல கார்த்திக் மீது செங்கல் வீச்சு - தப்பினார்
விருதுநகர் தொகுதிக்குட்பட்ட மொட்டுக்குண்டு, ஆர்.ஆர்.நகர், சென்னல்குடி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கார்த்திக் வேனில் சென்றபடி பிரசாரம் செய்தார்.
சென்னல்குடியில் அவர் பிரசாரம் செய்த போது திடீரென யாரோ ஒருவர் செங்கல்லை எடுத்து வேனை நோக்கி வீசினார். ஆனால் செங்கல் கார்த்திக் மீது படவில்லை. மாறாக வேன் மீது விழுந்து உடைந்தது. அதிர்ஷ்டவசமாக தப்பினார் கார்த்திக்.
செங்கல்லை வீசியதாக 25 வயதாகும் செந்தில் என்ற வாலிபரைப் போலீஸார் வளைத்துப் பிடித்தனர். இவர் சென்னல்குடியைச் சேர்ந்தவர்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து சிவகாசி ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே கார்த்திக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கார்த்திக் மீது செங்கல் வீசப்பட்டதை நடிகர் சரத்குமார் கண்டித்துள்ளார்.
இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக், நான் வெற்றி பெறுவது உறுதி. இதனால் தோல்வி பயத்தில் கல்லை வீசியுள்ளனர். இது ஜனநாயகத்தைப் படுகொலை செய்வதற்குச் சமம். எனக்கு கூடுதல் பாதுகாப்புத தேவை என்றார் கார்த்திக்.