For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. ஆதரவுடன் ஈழமா?: காமெடி செய்யும் பாமக, மதிமுக - திருமா

By Staff
Google Oneindia Tamil News

சிதம்பரம்: ஜெயலலிதாவுக்கு பின்னால் நின்று கொண்டு தனி ஈழம் அமைப்போம் என்று பாமக மற்றும் மதிமுகவும் கூறுவது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அரசியல் நகைச்சுவை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் பாமகவை சேர்ந்த பொன்னுச்சாமி போட்டியிடுகிறார்.

இந்நிலையில் சிதம்பரத்தில் பிரசாரம் செய்து வரும் திருமா கூறுகையில்,

அதிமுக அணியினர் அவதூறு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நான் வெற்றி பெற்றால் வன்முறையை தூண்டி விடுவான் என்று பாமக, அதிமுகவினர் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். ஈழத் தமிழர் பிரச்சினையை முன்னிறுத்தி திமுக அணிக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர்.

ஆனால், கடந்த ஒரு மாதமாக சிதம்பரம் தொகுதியில் பிரசாரம் செய்து வரும் நான் திமுக அரசின் சாதனைகளையும், ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் நடத்தி வரும் போராட்டங்களையும், தொகுதியை மேம்படுத்துவது பற்றியும் எடுத்துக்கூறி வருகிறேன்.

தேர்தலுக்கு அதிமுக, காங். கூட்டணி...

அதிமுக மத்திய அரசையோ, காங்கிரஸ் கட்சியையோ விமர்சிக்கவில்லை. அவர்கள் திமுக தலைவர்களை மட்டுமே விமர்சிக்கின்றனர். இதில் உள்நோக்கம் இருக்கிறது. அதாவது, தேர்தலுக்கு பிறகு அதிமுகவும், பாமகவும் வாய்ப்பு கிடைத்தால் காங்கிரசோடு கூட்டணி சேரலாம்.

ஒரு வேளை பாஜக ஆட்சிக்கு வந்தால் அவர்களோடும் கூட்டு சேர வேண்டும் என்பதற்காகவே சேது கால்வாய் திட்டத்தை ரத்து செய்வோம் என்றும், பாறை படிவுமான மணல் திட்டுகளை ராமர் பாலம் என்றும், அதை சேதப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.

பாமகவும், மதிமுகவும் இந்த பிரச்சினையில் வாய் திறக்கவில்லை. ஏனெனில் வாய்ப்பு இருந்தால் அவர்களும் பாஜகவுடன் சேரும் உள்நோக்கத்துடன் இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் ஜெயலலிதாவுக்கு பின்னால் நின்று கொண்டு தனி ஈழம் அமைப்போம் என்று கூறுவது 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய அரசியல் நகைச்சுவை ஆகும்.

புலியார் யார்? என்பதை ஜெ விளக்க வேண்டும்...

தனி ஈழம் அமைப்போம் என்று கூறும் ஜெயலலிதா விடுதலைப்புலிகளை பற்றி தன்னுடைய நிலைப்பாட்டை விளக்க வேண்டும். விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளா? அல்லது தனி ஈழம் அமைய போராடும் போராளிகளா? என்பதை விளக்க வேண்டும்.

திமுக, காங்கிரசோடு இணைந்து இருப்பதால் துரோகம் இழைக்கப்படுவதாக கூறும் அதிமுக அணியினர், காங்கிரசோடு இல்லாத அவர்கள் இலங்கையில் போரை நிறுத்த போராட்டம் நடத்த வேண்டியது தானே? அவர்களை யார் தடுத்தது?

அதிமுக அணியின் இத்தகைய போக்கை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஈழ தமிழர்களுக்காக வாதாட பாராளுமன்றத்திற்கு பொன்னுசாமி போக வேண்டுமா? அல்லது திருமாவளவன் போக வேண்டுமா? என்பதை சிதம்பரம் தொகுதி மக்கள் நிதானமாக சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.

ராஜபக்சேவும், ஜெயலலிதாவும் தான் நண்பர்கள்...

முதல்வர் கருணாநிதியும், ராஜபக்சேவும் நண்பர் என்று கூறுவது உண்மை இல்லை. ராஜபக்சேவும், ஜெயலலிதாவும் தான் நண்பர்கள். திமுக தலைவர் மீது பழி சொல்வதை மக்கள் நம்ப தயாராக இல்லை. அதிமுக கூட்டணி தேர்தலுக்கு பிறகு உடைந்து விடும். கூட்டணி கட்சியை ஜெயலலிதா தூக்கி எறிந்து விடுவார் என்றார் திருமா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X