நேபாளத்தில் அரசு-ராணுவம் மோதல்: புரட்சி வெடிக்கும் அபாயம்
நேபாளத்தில் மாவோயிஸ்ட்கள் புரட்சி நடத்தி மன்னராட்சியை ஒழித்து நாட்டை குடியரசாக மாற்றினர். மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தா எனப்படும் புஷ்பா கமல் தாகல் பிரதமாரானார். இதையடுத்து அவர் ராணுவத்தில் மாவோயிஸ்ட்களை அதிகம் சேர்க்க ஆசைப்பட்டுள்ளார்.
ஆனால் இந்த முடிவுக்கு ராணுவ தளபதி ரூக்மங்கத் கத்வால் போதிய ஒத்துழைப்பு தரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பிரதமருக்கும் ராணுவ தளபதிக்கும் இடையே பணி போர் துவங்கியது.
இதைத் தொடர்ந்து எட்டு துணை தளபதிகளின் பணியை மேலும் சில ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என ராணுவ தளபதி கூறியுள்ளார். ஆனால், அதை மறுத்துவிட்ட பிரதமர் அவர்கள் 8 பேருக்கும் ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ராணுவ தளபதி அந்த உத்தரவுகளை வாங்கி வைத்து கொண்டார். அவற்றின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவை ஏன் நடைமுறை படுத்தவில்லை என ராணுவ தளபதியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கும் அவர் எந்த பதிலும் கொடுக்காததையடுத்து சிறப்பு அமைச்சரவை கூட்டத்தை கூட்டி அவரை அதிரடியாக பதவியில் இருந்து தூக்கி எறிந்தார் பிரதமர்.
மேலும் தமது ஆதரவாளரான குல் பகதூர் கத்கா என்பவரை தளபதியாக நியமித்துள்ளார்.
இந் நிலையில் வரும் ஆக்ஸ்ட் மாதம் கத்வால் ஓய்வு பெறும் வரை நேபாள அரசு அமைதியாக இருக்க வேண்டும் என்றும், அவரை நீக்கினால் குழப்பம் ஏற்படலாம் என இந்திய அரசு எச்சரித்துள்ளதாகத் தெரிகிறது.
ராணுவ ஆட்சி அபாயம்...
இந்நிலையில் கத்வால் ராணுவ தளபதி பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டதாகவும், அவர் ராணுவ தலைமையகத்தில் முக்கிய ராணுவ அதிகாரிகளின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இதையடுத்து நேபாளத்தில் ராணுவ ஆட்சி ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கூட்டணி ஆதரவு வாபஸ்...
தற்போது ராணுவ தளபதி நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவோயிஸ்டின் முக்கிய கூட்டணி கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் ஐக்கிய லெனிஸ்ட்-மார்க்சிஸ்ட் பிரிவு கூட்டணியை முறித்து கொள்வதாக அறிவித்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஆதரவையும் வாபஸ் பெற்றுள்ளதாகவும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வர் போக்ரெல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே எதிர்கட்சியான நேபாள காங்கிரசும் பிரதமரின் முடிவை எதிர்த்து போராடி வருவதால், ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது.
உத்தரவு செல்லாது-அதிபர்...
இவர்களை தொடர்ந்து அதிபர் ராம் பரன் யாதவ் ராணுவ தளபதியை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், அந்த உத்தரவு செல்லாது என கூறி கத்வாலை மீண்டும் ராணுவ தளபதியாக அறிவித்தார்.
இதையடுத்து பிரசந்தா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தங்களுடைய கட்சி தலைவர்கள் மற்றும் அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னர் அவர் இந்த முடிவை அந்நாட்டு தொலைகாட்சியின் மூலம் அறிவித்துள்ளார்.