நாகர்கோவிலில் சிபிஎம் தேர்தல் அலுவலகம் சூறை!
நாகர்கோவில்: நாகர்கோவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மினுக்கு ஆதரவாக கூட்டணிக் கட்சிகள் சார்பில் நாகர்கோவில் மூவேந்தர் நகரில் அமைக்கப்பட்ட தேர்தல் அலுவலகம் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டுள்ளது.
சிபிஎம்-அதிமுகவினர் இணைந்து அமைத்துள்ள இந்த தேர்தல் அலுவலகத்துக்கு வந்த அடையாளம் தெரியாத சிலர் அங்கிருந்த சேர், டேபிள், போர்டு முதலியவற்றை அடித்து நொறுக்கினர். அலுவலகத்தில் இருந்த கூட்டணி கட்சி கொடிகளையும் கிழித்து எறிந்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
தகவல் அறிந்த அதிமுக மாவட்டச் செயலாளர் கே.டி. பச்சைமால், நகரச் செயலாளர் எம்.எம். பால்ராஜ், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பார்த்தசாரதி, சிபிஎம் நகர செயலாளர் அந்தோணி ஆகியோர் விரைந்து வந்தனர்.
அதன்பின் கூட்டணி கட்சிகளின் சார்பில் அதிமுக நகர மாணவரணி செயலாளர் முருகேஷ்வரன் இது குறித்து நாகர்கோவில் நேசமணி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதனால் இப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.