பாதுகாப்பு வளையத்தில் தளபதிகளுடன் பிரபாகரன்- ராணுவம்

இதுகுறித்து இலங்கை ராணுவத் தரப்பில் கூறுகையில், பிரபாகரன் போர் அற்ற பகுதியில் தனது முக்கிய தளபதிகளுடன் பதுங்கியிருக்கிறார். அவரை நிச்சயம் பிடித்து விடுவோம்.
ராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையே நடந்த கடும் மோதலில் 55 புலிகளை கொன்று விட்டோம். மேலும் புலிகளை மேலும் உட்புறமாக தள்ளி விட்டோம்.
வரும் நாட்களில் பெரிய அளவில் எதிர்ப்பின்றி பிரபாகரனையும், அவரது தளபதிகளையும் பிடித்து விட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி கூறுகையில், நோயாளி போலவோ அல்லது மக்களோடு, மக்களாக சேர்ந்தோ பிரபாகரனால் தப்ப முடியாது. அது சாத்தியமற்றது. எனவே பிரபாகரன் பாதுகாப்பு வளையப் பகுதிக்குள்தான் பதுங்கியிருக்க வேண்டும் என உறுதியாக நம்புகிறோம்.
படையினர் தொடர்ந்து தங்களது நிலைகளை ஸ்திரப்படுத்தி வருகின்றனர். விடுதலைப் புலிகளின் கடும் எதிர்த் தாக்குதலை சமாளித்து முன்னேறி வருகின்றனர் என்றார்.
சரணைடயும் புலிகளுக்கு மன்னிப்பு..
இதற்கிடையே, சரணடையும் விடுதலைப் புலிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படும் என இலங்கை மனித உரிமைத் துறை அமைச்சர் மகிந்தா சமரசிங்கே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சரணடையும் விடுதலைப் புலிகளுக்கு பொது மன்னிப்பு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும். அதேசமயம், பிரபாகரனுக்கு தரப்பட மாட்டாது.
இதுதொடர்பான சட்ட முகாந்திரங்கள் குறித்து அரசு வக்கீல்கள் ஆலோசித்து வருகின்றனர்.
பல்வேறு தாக்குதல்கள் மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட யாருக்கும் பொது மன்னிப்பு தர முடியாது. அவர்கள் சட்டப்படியான நடவடிக்கையை சந்தித்தாக வேண்டும்.
சரணடையும் விடுதலைப் புலிகள் புதிய வாழ்க்கைப் பாதைக்குத் திரும்ப அவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்படும் என்றார் அவர்.
மருத்துவமனையை தாக்கவில்லை..
இதற்கிடையே முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த தற்காலிக மருத்துவமனை மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்றும், அதில் 80 பேர் கொல்லப்பட்டதாகவும், மருத்துவமனை சேதமடைந்ததாகவவும் கூறப்படுவது உண்மையல்ல என்றும் ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட புகைப்படங்கள் புனையப்பட்டவை என்றும் அவர் கூறியுள்ளார்.
50,000 பேர் சிக்கித் தவிப்பு...
இதற்கிடையே போர்ப் பகுதியில் இன்னும் 50 ஆயிரம் பேர் வரை சிக்கியிருக்கலாம் என ஐ.நா. கூறியுள்ளது.
போர்ப் பகுதியிலிருந்து இதுவரை தப்பி வந்தவர்களில் பெரும்பாலானோர் படுகாயமடைந்த நிலையில் வந்துள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
ரணதுங்கா சகோதரர் முதல்வர் ஆனார்...
இதற்கிடையே, இலங்கை மேற்கு மாகாண முதல்வராக முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அர்ஜூன ரணதுங்காவின் சகோதரர் பிரசன்னா ரணதுங்கா பதவியேற்றுள்ளார்.
ஏப்ரல் 26ம் தேதி இந்த மாகாணத்திற்குத் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் ராஜபக்சே தலைமையிலான கூட்டணிக்கு 64.73 சதவீத வாக்குகள் கிடைத்தன.
மேற்கு மாகாணத்தில் உள்ள மொத்தம் உள்ள 104 சீட்களில், 68 சீட்களை ராஜபக்சே கூட்டணி கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
கனரக ஆயுதங்களால் தாக்குதல்-ஐ.நா:
கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியும் கூட கனரக ஆயுதங்களை பயன்படுத்தி ராணுவம் தாக்கி வருவதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் மேரி ஓகாபே கூறியுள்ளார்.
நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கை ராணுவம் இலகு ரக மற்றும் கனரக ஆயுதங்களை வைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதலை தீவிரப்படுத்தியும் உள்ளது.
இதுவரை போர்ப் பகுதியிலிருந்து 1 லட்சத்து 88 ஆயிரம் பேர் தப்பி வந்துள்ளனர். அவர்களுக்கு உணவும், மருந்துகளும் இன்னும் தட்டுப்பாடாக உள்ளன என்றார்.
4.5 சதுர கிலோமீட்டருக்குள் புலிகள்..
தற்போது விடுதலைப் புலிகள் வெறும் 4.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மட்டுமே இருப்பதாகவும், மொத்தம், 500 வீரர்கள் மட்டுமே இருப்பார்கள் எனவும் ராணுவம் கூறியுள்ளது.











Click it and Unblock the Notifications