வடக்கில் முடிகிறது தேர்தல் -தெற்கை நோக்கி வரும் தலைவர்கள்
சென்னை: வட மாநிலங்களில் தேர்தல் முடிவுக்கு வருவதைத் தொடர்ந்து கடைசி கட்டமாக தேர்தல் நடைபெறும் தமிழகத்தை நோக்கி வட மாநில அரசியல் தலைவர்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
சோனியா காந்தி, அத்வானி, ராஜ்நாத் சிங், ராகுல் காந்தி உள்ளிட்டோர் அடுத்தடுத்து தமிழகத்திற்கு வருகின்றனர். பிரதமர் மன்மோகன் சிங்கும் வருகிறார்.
நாளை வருகிறார் சோனியா..
முதல் தலைவராக சோனியா காந்தி நாளை சென்னை வருகிறார்.
பிற்பகல் புதுச்சேரி வரும் அவர் அங்குள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் உரை நிகழ்த்துகிறார்.
அதை முடித்து விட்டு மாலையில் சென்னைக்கு வரும் சோனியா, தீவுத் திடலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
நாளை மறு நாள் அத்வானி..
பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானி 7ம் தேதி தமிழகம் வருகிறார். அதேபோல பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கும் தமிழகம் வருகிறார்.
சென்னை, நெல்லை, பரமக்குடி ஆகிய இடங்களில் நடக்கும் கூட்டங்களில் பேசுகிறார் அத்வானி.
9ம் தேதி மோடி வருகிறார்..
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி 9ம் தேதி வருகிறார்.
நாகர்கோவில், கோவை பொதுக் கூட்டங்களில் பேசுகிறார்.
10ம் தேதி ராஜ்நாத் சிங்...
அதேபோல பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் 10ம் தேதி சென்னையில் பிரசாரம் செய்கிறார்.
பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி ஆகியோரும் தமிழகம் வரவிருப்பதாக காங்கிரஸ் கூறுகிறது.
சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவும் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
4வது கட்ட தேர்தல் 7ம் தேதி நடைபெறுகிறது. அந்த்த தொகுதிகளுக்கு இன்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதையடுத்து மேலும் பல வட மாநில தலைவர்கள் தமிழகத்திற்கு பிரசாரம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.