'வணக்கம், அன்புச் சகோதரி ஜெயலலிதா பேசுறேன்..'!!

வாக்காளர்களைக் கவர முன்பெல்லாம் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்வார்கள், ஊர் ஊராக சென்று வாக்கு கேட்பார்கள், ஒரு சுவரையும் விடாமல் விளம்பரம் எழுதுவார்கள், நாளிதழ்களில் விளம்பரம் கொடுப்பார்கள், தூர்தர்ஷனில் நேரம் ஒதுக்கப்பட்டு அதிலும் பிரசாரம் செய்வார்கள்.
இதெல்லாம் அந்தக் காலம். இப்போது டிரென்டே மாறிப் போய் விட்டது. எஸ்.எம்.எஸ்., இன்டர்நெட், வாய்ஸ் மெசேஜ் என அதி நவீனமாகி விட்டது பிரசாரம்.
அந்த வகையில் வாய்ஸ் மெசேஜ் மூலம் மதுரை வாக்காளர்களை அசரடித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
நேற்று காலை மதுரை மக்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், வணக்கம், இது உங்கள் அன்புச் சகோதரி ஜெயலலிதா.
இருளில் தவிக்கும் தமிழகத்திற்கு ஒளியேற்ற, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த, தமிழர்களைக் காக்க, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அதிமுக தலைமையிலான அணிக்கு வாக்களியுங்கள்.
மறவாதீர், உங்கள் சின்னங்கள் - இரட்டை இலை, மாம்பழம், அரிவாள், சுத்தியல், அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் என்று ஜெயலலிதாவின் குரல் போனில் ஒலித்ததும், மதுரை மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
நம்மா அம்மாவா பேசுனது என்று ஆச்சரியமடைந்து போனார்கள். கொஞ்சம் சுதாரித்தவர்கள், தங்களுக்கு வந்த எண்ணைத் ( இரு எண்களில் அழைப்பு வந்ததாம் - 0914044783360, 0914044621000) தொடர்பு கொண்டபோது பதில் வரவில்லை.
அதன் பிறகுதான் மக்களுக்குத் தெரிந்தது, வாய்ஸ் மெசேஜ் செய்தி இது என்று.
தற்போது பிரசாரத்தில் நவீனத்தைப் புகுத்தும் காலம் என்பதால் வாய்ஸ் மெசேஜிங் சர்வீஸுக்கு நல்ல கிராக்கி உள்ளதாம். கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த வாய்ஸ் மெசேஜ் சர்வீஸைப் பயன்படுத்தி வாக்களர்களிடம் வாக்கு கேட்கின்றனர்.
நேற்று ஜெயலலிதாவின் குரலில் வெளியான வாய்ஸ் மெசேஜ் செய்திக்கு, 30 விநாடிகளுக்கு 1.50 கட்டணமாம். 1000 அழைப்புகள் வரை இந்தக் கட்டணம். அதற்குப் பிறகு மேற்கொள்ளும் அழைப்புகளுக்கேற்ப இந்தக் கட்டணம் மாறுமாம்.
அடுத்த முறை கேப்டன் போனில் வந்தாலும் வரலாம், காதுகளை தயாரா வச்சுக்குங்க..












Click it and Unblock the Notifications