ஒபாமா உத்தரவு: இந்தியாவுக்கு பாதிப்பு எவ்வளவு?

குறிப்பாக இந்தியாவில் இதன் பாதிப்பு பெருமளவு தெரியத் துவங்கியுள்ளது.
காரணம் இந்தியாவைப் பொறுத்தவரை ஐடி நிறுவனங்கள் என்று சொல்லிக் கொள்ளும் பல, மென்பொருள் உற்பத்தியை விட, பிபீஓ எனப்படும் அவுட்சோர்ஸிங் பணிகளை நம்பியே உள்ளன.
வெளிநாட்டு ஐடி நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் வேலைகளை முடித்துத் தர போட்டி போட்டுக் கொண்டு இங்கே நிறைய நிறுவனங்கள் உருவாகிவிட்டன. குறிப்பாக ஐதராபாத், பெங்களூரு, சென்னை மற்றும் புனேயில்தான் அமெரிக்க நிறுவனங்களுக்கான பெருமளவு பணிகள் நடைபெறுகின்றன.
அமெரிக்க நிறுவனங்களைப் பொறுத்தவரை, குறைந்த சம்பளத்தில், குறித்த காலத்தில் பணிகள் முடிவதோடு, அமெரிக்க அரசு தரும் தொழில் வரிச் சலுகைகள் மற்றும் வருமான வரிச் சலுகைகளும் கிடைத்து வந்தன.
இந்தச் சூழலில்தான், சம்பளம் குறைவாக இருந்தாலும், அந்தப் பணி கூட அமெரிக்கருக்கே கிடைக்க வேண்டும் என்ற அதிபர் ஒபாமாவின் சுதேசிக் கொள்கை அமலுக்கு வந்துள்ளது.
இதனால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன, அமெரிக்க நிறுவனங்களைச் சார்ந்து மட்டுமே இயங்கி வந்த இந்திய ஐடி நிறுவனங்கள்.
அதிபர் ஒபாமாவின் இந்த அறிவிப்பையும் மீறி, அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் அவுட் சேர்ஸிங் செய்தால் இழப்பு எவ்வளவு?
"உண்மையிலேயே பெரிய இழப்பைச் சந்திக்க வேண்டி வரும். உதாரணத்துக்கு, இதுவரை ஒரு பணிக்கு 100 டாலர் செலவு ஒரு அமெரிக்க நிறுவனம் செலவழிக்கிறதென்றால், அதில் 35 டாலர் வரிச் சலுகையாக, அந்த நிறுவனத்துக்கே திரும்பக் கிடைத்துவிடும். உண்மையில் செலுத்த வேண்டியது 65 டாலர் மட்டுமே.
இன்னும் சில நிறுவனங்களுக்கு அவை செய்யும் பணிகளின் அடிப்படையில் 70 சதவிகிதம் வரை கூட வரிச்சலுகை கிடைத்து வந்துள்ளது.
ஒபாமாவின் உத்தரவை மீறி, இந்தியாவிலேயே பணிகளைச் செய்தால், இந்த சலுகையை முழுமையாக இழக்க வேண்டிவரும்.
உற்பத்தி மட்டத்திலேயே கிடைக்கும் இந்த பெரிய சலுகையை இழக்க எந்த அமெரிக்க நிறுவனம்தான் முன்வரும்?" என்கிறார் கேபிஎம்ஜி கன்சல்டன்ஸி நிறுவனத்தின் தலைவர்.
இதைத்தவிர, அரசின் உத்தரவை மீறிய நிறுவனம் என்ற கரும்புள்ளியும் விழும் ஆபத்துள்ளதால், இந்தியாவில் பணிகளைச் செய்துவந்த ஏராளமான அமெரிக்க நிறுவனங்கள், முழுமையாக இந்தியப் பணியாளர்களை விலக்க ஆரம்பித்துள்ளன.
அதேநேரம் அவை மிகப்பெரிய சவாலைச் சந்திக்க வேண்டியுள்ளது. காரணம், அமெரிக்காவில் ஐடி துறையில் திறமைவாய்ந்த பணியாளர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. நிர்வாகப் பிரிவை விட, தொழில் நுட்பத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் குறைவே. அதனால்தான் பெரும்பாலும் இந்தியர்களை அவை நாடுகின்றன. ஒபாமாவின் உத்தரவால், நன்கு திறமை வாய்ந்த நிபுணர்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன இந்த அமெரிக்க நிறுவனங்கள்.
ஏற்கெனவே பொருளாதார மந்தத்தில் தடுமாறும் இந்தியா, ஒபாமா உத்தரவால் கூடுதல் வேலையின்மை பிரச்சினையையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications