கஸாப் மீது 86 கொலை வழக்குகள் பதிவு
மும்பை: மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி முகம்மது அப்துல் அமீர் கஸாப் மீது, கொலை, நாட்டின் மீது போர் தொடுத்தது உள்ளிட்ட 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கு தனி கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கஸாப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
மொத்தம் 86 குற்றங்கள் கஸாப் மீது சுமத்தப்பட்டுள்ளது. கொலை செய்தது, ஆயுதங்கள், வெடிபொருட்கள் வைத்திருந்தது, நாட்டின் மீது போர் தொடுத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அவர் மீது போடப்பட்டுள்ளன.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்த கஸாப், நான் நிரபராதி என நீதிபதியிடம் தெரிவித்தான்.
கஸாப் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு மரண தண்டனை கிடைக்கும் என்பது குறி்பிடத்தக்கது.
கஸாப் தவிர இந்தியர்களான பஹீம் அன்சாரி, சபாபுதீன் அகமது உள்ளிட்ட 37 பேர் மீதும் இந்த வழக்கில் குற்றம் சாட்ட்பட்டுள்ளது.
இன்றைய வழக்கு முடிவின் அரசு வக்கீல் உஜ்வால் நிகாம் கூறுகையில், ஒரு வழியாக பூனை வெளியே வந்து விட்டது. தான் பாகிஸ்தானி என்பதையும், தனக்கு 21 வயதாவதையும் கஸாப்பே ஒத்துக் கொண்டு விட்டான். அவன் மீது 86 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தனக்கு முதலில் 17 வயதுதான் என்று கூறி கோர்ட்டை திசை திருப்பப் பார்த்தான் கஸாப். ஆனால் மருத்துவப் பரிசோதனையில் உண்மை தெரிய வந்தது. இதையடுத்து தான் 21 வயது வாலிபர் என்பதை அவன் ஒத்துக் கொண்டான் என்றார்.
கஸாப்பின் வக்கீல் அப்பாஸ் கஸ்மி கூறுகையில், கஸாப் பாகிஸ்தானிதான். அதை நான் சந்தேகப்படவில்லை. அவனைப் பொறுத்தவரை தான் நிரபராதி என்பது அவனது கருத்து. அதை கோர்ட்டிலும் கூறியுள்ளான் என்றார்.