ஈழப் படுகொலை சிடி: அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை: ஈழத் தமிழர் படுகொலையை சித்தரிக்கும் சிடியை விநியோகிப்பது தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் விளக்கம் அளிக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னையை சேர்ந்த செந்தில்குமார் என்ற வழக்கறிஞர் இதுதொடர்பாக தாக்கல் செய்திருந்த பொது நலன் மனுவில்,
நானும் சில வக்கீல்களும் சேர்ந்து எரிகிறது தமிழ் ஈழம், நம் நெஞ்சில் பிறக்கிறது ஈரம்' என்ற தலைப்பில் சி.டி. ஒன்றை தயாரித்தோம். இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதையும், இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் போராட்டம் நடத்தியபோது வக்கீல்கள் - போலீசாருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தையும் அந்த சி.டி.யில் தொகுத்து இருந்தோம்.
இந்த சி.டி.யை ஒளிபரப்ப திட்டமிட்ட நிலையில் போலீசார் கைப்பற்றி விட்டனர். மேலும் சிலரை கைது செய்து விட்டனர். இது போலீசாரின் அத்து மீறல் நடவடிக்கை ஆகும். ஆகவே இந்த சி.டி. ஒளிபரப்பில் போலீசார் தலையிடக் கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.ஜோதிமணி, டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
பின்னர் இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு அரசுக்கும், காவல்துறை தலைவருக்கும் நோட்டீஸ் பிறப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணை வருகிற செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications