'பிரச்சார பீரங்கி' குண்டு கல்யாணம் மீது கல்வீச்சு!
புதுக்கோட்டை: அதிமுக சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ராஜ. கண்ணப்பனுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு பிரசாரம் செய்து கொண்டிருந்த நடிகர் குண்டு கல்யாணம் மீது கல்வீசிய குடிகார வாலிபரை அதிமுகவினர் மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு தெற்கு முக்கம் என்ற இடத்தில் தெரு முனைப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் நடிகர் குண்டு கல்யாணம்.
தனது பாணியில் உடல் குலுங்க குலுங்க மத்திய அரசையும், திமுக அரசையும் பிடித்து உலுக்கி எடுத்துக் கொண்டிருந்தார் கல்யாணம்.
அப்போது திடீரென ஒரு கல் கல்யாணம் அருகே வந்து விழுந்தது. இதனால் சலசலப்பு ஏற்பட்டது. யார் கல் வீசியது என அதிமுகவினர் அங்கும் இங்கும் பார்த்தனர். அப்போது இன்னொரு கல்லும் வந்து விழந்ததால் டென்ஷன் ஆனது.
அப்போது ஒரு வாலிபர் கல்லும், கையுமாக காணப்பட்டார். அவரைப் பிடித்து மடக்கி போலீஸாரிடம் கொடுத்தனர். விசாரணையில் கல்வீசியவர் பெயர் சக்திவேல். 26 வயதாகிறது, மாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர். கோவில் விழாவுக்குப் போனவர் வழியில் மது அருந்தியுள்ளார். அந்த மப்பில் வந்தவர், வழியில் குண்டு கல்யாணம் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து போதையில் இரண்டு கற்களை எடுத்து வீசியது தெரிய வந்தது.
இனிமேல் இப்படியெல்லாம் செய்யப்படாது என போலீஸார் சக்திவேலை எச்சரித்து அனுப்பி விட்டனர்.












Click it and Unblock the Notifications