4வது கட்ட தேர்தல்-நந்திகிராமில் துப்பாக்கிச் சூடு
85 எம்.பிக்களைத் தேர்வு செய்வதற்காக இன்று 4வது கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது. 9.46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று தேர்தல் நடந்தது. டெல்லியும் இதில் அடக்கம்.
காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் 1.29 லட்சம் வாக்குச் சாவடிகள் இதற்காக அமைக்கப்பட்டிருந்தன.
டெல்லியில் இன்று காலை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வாக்களித்தார். ஜனாதிபதி மாளிகையில் உள்ள ராஜேந்திர பிரசாத் சர்வோதயா வித்யாலயா பள்ளியில் அவர் வாக்களித்தார்.
துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியும் வாக்களித்தார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மகள் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோர் நிர்மல் பவன் அருகே உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் இன்று காலையிலேயே போய் வாக்களித்தார்.
உ.பி. மாநிலம் மணிப்புரி தொகுதியில் சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ் வாக்களித்தார்.
பீகாரில் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.
ஜம்மு காஷ்மீரில் வன்முறை...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேர்தல் தொடங்கிய சிறிது நேரத்திலேயே வன்முறை வெடித்தது.
அங்கு ஸ்ரீநகர் தொகுதியில் இன்று தேர்தல் நடக்கிறது. இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் வன்முறை வெடித்தது. இருப்பினும் சிறிது நேரத்தில் நிலைமை இயல்பானது.
பஞ்சாப், ஹரியானா...
ஹரியானாவில் 10 தொகுதிகளிலும், பஞ்சாபில் நான்கு தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடந்தது.
ஊரகப் பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நி்ன்று வாக்களித்து வருகின்றனர்.
டெல்லியில்...
டெல்லியில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடந்தது. ருகிறது. இங்குள்ள 7 எம்.பி தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.
நந்திகிராமில் துப்பாக்கிச் சூடு...
சர்ச்சைக்குரிய மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் உள்ள கோகுல் நகர் பகுதியில் இன்று காலை வன்முறை வெடித்தது. அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர் கொல்லப்பட்டார்.
சில இடங்களில் வாக்குச் சாவடிகளை கைப்பற்றுதல், வாக்குப் பதிவு இயந்திரங்களை சூறையாடுதல் ஆகிய சம்பவங்களும் நடந்துள்ளன.
இன்று தேர்தல் நடைபெற்ற மாநிலங்கள்..
ராஜக்தான் 25, உ.பி. 18, மேற்கு வங்கம் 17, ஹரியானா 10, டெல்லி 7, பஞ்சாப் 4, பீகார் 3, ஜம்மு காஷ்மீர் 1.
முக்கிய வேட்பாளர்கள்..
இன்றைய தேர்தலில் களத்தில் இருந்த முக்கிய வேட்பாளர்கள்..
முலாயம் சிங் யாதவ் (மணிப்புரி), லாலு பிரசாத் யாதவ் (பாடலிபுத்திரா), பரூக் அப்துல்லா (ஸ்ரீநகர்), கபில் சிபல் (சாந்தினி செளக்), சச்சின் பைலட் (ஆஜ்மீர்), சேகர் சுமன் (பாட்னா சாஹேப்), அஜய் மாக்கான் (புதுடெல்லி), சத்ருகன் சின்ஹா (பாட்னா சாஹேப்), பஜன் லால் (ஹிஸார்), அஜீத் சிங் (பாகேபட்) மற்றும் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி.
கடந்த 3 கட்ட தேர்தல்களில் மொத்தம் 372 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்து விட்டது. மொத்தமுள்ள 545 தொகுதிகளில் 543 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறுகிறது. மீதமுள்ள இரு தொகுதிகளும் ஆங்கிலோ இந்திய சமூகத்தினருக்கான நியமன தொகுதிகளாகும்.
இறுதிக் கட்ட வாக்குப் பதிவு வரும் 13ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் 11ம் தேதி மாலை 5 மணியுடன் ஓய்கிறது.
வாக்கு எண்ணிக்கை மே 16ம் தேதி நாடு தழுவிய அளவில் நடைபெறுகிறது.