அதிமுக, ஐக்கிய ஜ.தளத்துடன் கூட்டணி-ஷீலா தீட்சித்

ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத்தைத் தொடர்ந்து, சோனியா காந்தியின் நிழல் போல கருதப்படும் ஷீலா தீட்சித்தும், தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவுடன் கூட்டணி வரும் என்று கூறியிருப்பது திமுக வட்டாரத்துக்கு நிச்சயம் மகிழ்ச்சி தரும் செய்தி அல்ல.
அதிமுக தவிர ஐக்கிய ஜனதாதளமும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு தரும் என தீட்சித் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று வாக்களி்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீட்சித், நிதீஷ் குமார் (பீகார் முதல்வர், ஐக்கிய ஜனதாதளம்) மிகச் சிறப்பாக செயல்படுகிறார். எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள். அவர் மக்களுக்காக, மக்களின் வளர்ச்சிக்காக செயல்படக் கூடியவர்.
அதிமுகவுடன் கூட்டணி வருமா என்று கேட்டால், காங்கிரஸ் எத்தனை சீட்களைப் பெறுகிறது என்பதைப் பொறுத்தது அது. அனைத்து வாய்ப்புகளையும் நாங்கள் வைத்துள்ளோம். மதவாத சக்திகளைத் தவிர அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் காங்கிரஸ் வரவேற்கும் என்றார் தீட்சித்.
அதிமுகவுடன் கூட்டணி சாத்தியமா என்று செய்தியாளர்கள் மீண்டும் குறிப்பிட்டுக் கேட்டபோது, ஆமாம் என்றார் தீட்சித்.
காங்கிரஸ் முன்னணித் தலைவர்கள் அடுத்தடுத்து அதிமுக கூட்டணிக்கு வரும் என்று பேசி வருவதும், அதை ஜெயலலிதா ஆணித்தரமாக மறுக்காமல் இருப்பதும் திமுக வட்டாரத்தை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
கருணாநிதியின் நலம் விசாரித்த சோனியா:
இதற்கிடையே உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து அவரிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 3ம் தேதியன்று அனுமதிக்கப்பட்ட முதல்வர் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நலக்குறைவால் கருணாநிதி பாதிக்கப்பட்டதால் நேற்று நடப்பதாக இருந்த சோனியா காந்தியின் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications