தேர்தல் செலவுக்காக வீட்டை விற்ற இளங்கோவன்?!
ஈரோடு: ஈரோடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தேர்தல் செலவுக்காக வீட்டை விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த முறை கோபி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட இளங்கோவன் வெற்றி பெற்று மத்திய ஜவுளித்துறை இணையமைச்சராக உள்ளார். இந் நிலையில் இம்முறை அவருக்கு புதிதாக உருவான ஈரோடு மக்களவை தொகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளது.
தலைமையிடம் இருந்து தேர்தல் செலவுக்கு போதுமான 'சி விட்டமின்' வரும் என நம்பி காத்திருந்தாராம். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி குறித்த தருணத்தில் 'விட்டமின்' வரவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் கூட்டணி கட்சியினரும், காங்கிரஸாரும் 'விட்டமினை' கண்ணில் காட்டினால் மட்டுமே வேலையில் வேகம் காட்டுகிறார்கள்.
இனால் தேர்தல் செலவுக்கு தடுமாறிய இளங்கோவன் ஈரோட்டில் உள்ள தனது சொந்த வீட்டை விற்று தேர்தல் செலவு செய்து வருகின்றார் என்கிறார்கள்.
ஆனால் அதிமுக தரப்போ மத்திய அமைச்சருக்கு தேர்தல் செலவுக்கு பணம் இல்லையா? யாரை ஏமாற்ற இந்த நாடகம்? என்று தெருவுக்கு தெரு மைக்கில் வெளுத்து வாங்கி வருகிறார்கள்.
ஈ.வி.கே.எஸ். அசிங்க பேச்சு!:
இதற்கிடையே, ''பெரியாரின் உண்மையான பேரன் என்று சீமான் தன்னை சொல்லி வருகிறார். உண்மையில் நான் தான் உண்மையான பேரன். நான் தான் உண்மையான பேரன் என்று சீமான் சொல்வதைப் பார்க்கும் போது பெரியார் சின்ன வயதில் தவறு செய்திருப்பார் போலிருக்கிறது'' என்று இளங்கோவன் பேசியதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
பிரச்சாரத்தின்போது இளங்கோவன் இவ்வாறு பேசியதற்கு 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இளந்தமிழர் இயக்கம் கோரியுள்ளது.
இல்லாவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அந்த இயக்கம் அறிவித்துள்ளது.