சென்னையில் ரூ. 80 லட்சம் மதிப்புள்ள 300 பவுன் நகை, பணம் கொள்ளை
சென்னை: சென்னையில் பிளாஸ்டிக் கம்பெனி அதிபர் வீட்டிலிருந்து ரூ. 80 லட்சம் மதிப்பிலான 300 பவுன் தங்க நகை, ரூ. 1 லட்சம் பணம் கொள்ளையடித்து செல்லப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாரிமுனையில் பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வருபவர் சிதம்பரம். இவரது வீடு ஆழ்வார் பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் இருக்கிறது. இவருக்கு லதா (50) என்ற மனைவியும் இரண்டு மகன்களும், 1 மகளும் இருக்கின்றனர்.
மகன்கள் இருவரும் அவரது வீட்டின் மாடியில் குடியிருந்து வருகின்றனர். திருவாரூரில் கணவருடன் வசித்து வரும் அவரது மகள் சத்யா (25) மற்றும் சத்யாவின் மகன் ரோஜன் (3) ஆகியோர் விடுமுறைக்காக சென்னை வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு சிதம்பரத்தின் இரு மகன்களும் குடும்பத்துடன் ஏதோ வேலை காரணமாக வெளியே சென்றுவிட்டனர். சிதம்பரம் கம்பெனியில் இருந்துள்ளார்.
வீட்டில் லதா, சத்யா மற்றும் சிறுவன் ரோஜன் ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர். வீட்டில் ஆண்கள் இல்லாததை அறிந்து கொண்ட மர்ம கும்பல் அவர்களது வீட்டுக்கு வந்து கதவை தட்டிக் கொண்டே சிதம்பரம் இல்லையா என கேட்டுள்ளது.
அப்பாவின் பெயரை சொல்லி யாரோ கூப்பிடுவதை அடுத்து சத்யா கதவை திறந்துள்ளார். இதையடுத்து அந்த கும்பைல சேர்ந்த நான்கு பேரும் உள்ளே புகுந்தனர். அதில் ஒருவன் குழந்தை ரோஜனை பிடித்து வைத்து கொண்டு நகை, பணம் மற்றும் பீரோ சாவியை கொடுக்குமாறு கேட்டுள்ளான். இல்லையென்றால் சிறுவனை கொலை செய்துவிடுவதாக் மிரட்டியுள்ளான்.
இதையடுத்து பதறிப்போன சத்யாவும், அவரது தாயாரும் பீரோ சாவியை அவர்களிடம் கொடுத்துள்ளனர். பின்னர் அந்த கொள்ளையர்கள் அவர்கள் மூவரையும் தனி அறையில் கட்டிப்போட்டனர். அவர்கள் வைத்திருந்த மொபைல் போன்களையும் ஆப் செய்து, எடுத்து கொண்டனர்.
பின்னர் நிதானமாக வீட்டில் உள்ள மூன்று பீரோக்களில் இருந்து 300 பவுன் தங்க மற்றும் வைர நகைகளையும், ரூ. 1 லட்சம் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர். மேலும், அவர்கள் போகும்போது வீட்டை வெளிபக்கமாக பூட்டிவிட்டு சென்றனர். இதையடு்த்து சத்யாவும், அவரது தாயாரும் ஜன்னல் வழியே அருகிலிருந்தவர்களை உதவிக்கு அழைத்தனர்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வந்து அவர்களது கட்டுக்களை அவிழ்த்துவிட்டனர். இதையடுத்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் தனி படை அமைத்து அந்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
போலீஸ் விசாரணையின் போது லதா கூறுகையில்,
கொள்ளையர்களில் ஒருவன் யாரிடமோ மொபைலில் பேசிக்கொண்டே இருந்தான். அவர்கள் நான்கு பேரும் நல்ல உயரமாக இருந்தார்கள். அனைவரின் கையிலும் கத்தி இருந்தது. குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு மிரட்டியதால் பயந்து போய் பீரோ சாவிகளை கொடுத்து விட்டேன் என்றார்.
டிரைவர் மீது சந்தேகம்...
தொழில் அதிபர் சிதம்பரம் கொள்ளை போன நகையின் மதி்ப்பு ரூ. 80 லட்சம் என்றும், இந்த கொள்ளையில் தனது கார் டிரைவருக்கு தொடர்பு இருக்கலாம் என் சந்தேகப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரது கார் டிரைவர் பூபாலனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications