புது மாப்பிள்ளையை கொன்ற பிளஸ் 2 மாணவர் கைது
சென்னை: சென்னையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நபர் ஒருவர் முன்விரோதம் காரணமாக வெட்டி கொல்லப்பட்டார். இதையடுத்து போலீசார் இந்த கொலையில் தொடர்புடைய ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களில் ஒருவர் தற்போது தான் பிளஸ் 2 எழுதியுள்ளார்.
சென்னை துரைப்பாக்கம் கந்தன்சாவடி, கோதண்டராமர் நகரை சேர்ந்த பக்தவச்சலம் (28) தனியார் நிறுவனம் ஒன்றுக்கு தனது காரை வாடகைக்கு ஓட்டி வந்தார். இவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்கவிருந்தது.
இந்நிலையில் கடந்த 3ம் தேதி கந்தன்சாவடியில் நடந்த ஒரு சவ ஊர்வலத்தின் போது இவருக்கும், தரமணியை வேலு (19) என்பவருக்கும் இடையே தகராறு வெடித்தது. இதில் ஆத்திரமடைந்த வேலு, பக்தவச்சலத்தை எப்படியும் தீர்த்துகட்டிவிடுவது என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
இதையடுத்து அவரை கொலை செய்ய தனது நண்பர்களான தரமணியை சேர்ந்த வீரமணி (20), பிளஸ் 2 மாணவர் சுந்தர் (19), மாதவன் (20) மற்றும் கொட்டிவாக்கத்தை சேர்ந்த தனுஷ்குமார் (20) ஆகியோருடன் இணைந்து திட்டமி தீட்டியுள்ளனர்.
இந்த திட்டத்தின் படி அவர்கள் நேற்று இரவு 9 மணிக்கு வேலை முடித்துவிட்டு காரை வழக்கமாக நிறுத்தும் இடத்தில் விட்டுவிட்டு கந்தன்சாவடி எம்ஜிஆர் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு அரிவாள், கத்தி சகிதம் வந்து அவரை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த பக்தவச்சலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு கொலைக்கு காரணமான ஐந்து பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.