வாக்காளர்களுக்கு பணம்-மதுரைக்கு இன்னொரு பார்வையாளர்
சென்னை: வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, மதுரை தொகுதிக்கு மேலும் ஒரு பார்வையாளரை நியமித்துள்ளது தேர்தல் ஆணையம்.
மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மு.க.அழகிரி வாக்காளர்களுக்கு பணம் தந்து வருவதாக தலைமைத் தேர்தல் கமிஷனிடம் சிபிஎம் வேட்பாளர் மோகன் புகார் தந்தார்.
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவின் அறிக்கையை கேட்டுப் பெற்றது தேர்தல் ஆணையம். இதையடுத்து மதுரை போலீஸ் கமிஷனர் நந்தகோபாலனை மாற்றியது.
இந் நிலையில் மதுரை தொகுதிக்கு மேலும் ஒரு தேர்தல் பார்வையாளராக, கர்நாடக மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரியான மதனகோபாலை என்பவரை ஆணையம் நியமித்துள்ளது. ஏற்கனவே அங்கு 3 பார்வையாளர்கள் உள்ள நிலையில் மேலும் ஒரு பார்வையாளரும் நியமிக்கப்பட்டு்ள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையி்ல் மாறி மாறி 'பணப் புகார்':
இதற்கிடையே சென்னையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்துள்ளனர்.
தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், தியாகராயநகர் தொகுதி எம்எல்ஏவுமான கலைராஜன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,
மத்திய சென்னைக்குட்பட்ட 119வது வட்டத்தில் திமுகவினர் வாக்காளர்களுக்கு கவரில் ரூ. 3,000 பணத்தை வைத்து சப்ளை செய்வதாக புகார்கள் வந்தன. நாங்கள் கண்காணித்த போது திமுகவைச் சேர்ந்த வட்டச் செயலாளர் ஒருவர் கவரில் பணத்தை வைத்து சப்ளை செய்து கொண்டிருந்தார். அவரை பிடிக்க முற்பட்ட போது ரவுடிகளின் துணையோடு எங்களை தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டார்.
அவர் சப்ளை செய்த ஒரு கவர் மட்டும் எங்களுக்கு கிடைத்தது. அந்த கவரில் 500 ரூபாய் நோட்டுகளாக ரூ.3,000 பணம் இருந்தது. இதுபற்றி பாண்டி பஜார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம். போலீசார் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. எனவே போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் கொடுத்துள்ளோம் என்றார்.
மேலும் சென்னை ராயப்பேட்டை பகுதியிலும் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்ததாக பாபு என்பவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
திமுகவினரும் புகார்
அதிமுக புகாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவினரும், அதிமுகவினர் மீது பாண்டி பஜார் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதில், அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்ததாக கூறப்பட்டுள்ளது.
போலீசார் இந்த இரு புகார்களையும் வாங்கிக் கொண்டு முடியைப் பிய்த்துக் கொண்டுள்ளனர்.
மிரட்றாங்கோ... மதுசூதனன் புகார்:
அதே போல அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் கமிஷனர் அலுவலகத்தில் இன்னொரு புகார் கொடுத்தனர். அதில், அயோத்தி குப்பத்தில் ஓட்டு சேகரிக்க விடாமல் திமுகவினர் தடுக்கிறார்கள். அந்த பகுதி திமுக வட்ட செயலாளர் அதிமுகவினரை ஓட்டு சேகரிக்க விடாமல் மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு கூடுதல் பார்வையாளர்கள்:
இந் நிலையில் தமிழகத்தின் சில குறிப்பிட்ட தொகுதிகளுக்கு கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து துணை தேர்தல் ஆணையர் ஜே.பி.பிரகாஷ் கூறுகையில், தமிழகத்திற்கு கூடுதல் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர். இவர்கள் குறிப்பிட்ட சில தொகுதிகளில் கூடுதல் பார்வையாளர்களாக செயல்படுவர் என்றார்.