சோனியா, இலங்கையின் 5 வருட கூட்டுச் சதிக்கு ஆயிரக்கணக்கில் தமிழர்கள் பலி - வைகோ
உசிலம்பட்டி: கடந்து ஐந்து ஆண்டுகளாக சோனியா காந்தியும், இலங்கை அரசும் செய்து வந்த கூட்டுச் சதியால் இன்று ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து உசிலம்பட்டியில் வைகோ பேசுகையில்,
இன்று காலை எனக்கு கிடைத்த தகவலின்படி இலங்கையில் மூன்றரை லட்சம் தமிழ் மக்கள் ஒருவேளை கஞ்சி கூட கிடைக்காமல் பட்டினியால் வாடுகின்றனர். அங்கு பட்டினியால் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் செத்து மடிகிறார்கள். இன்னும் 2, 3 நாட்களுக்குள் பசியால் ஆயிரக்கணக்கானோர் செத்து மடியும் நிலை உள்ளது.
மருத்துவமனைகள் மீது தொடர்ந்து குண்டு வீசப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களுக்கு போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
சோனியாவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்த மத்திய அரசு சோனியாவின் உத்தரவின் பேரில் இலங்கைக்கு ஆயுத சப்ளை செய்து வருகிறது.
கடந்த 5 வருடங்களாக சோனியாவும் இலங்கை அரசும் கூட்டு சதி செய்து ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்து வருகின்றனர். இதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
இலங்கை அரசின் குண்டுவீச்சுக்கு பயந்து பச்சிளங்குழந்தைகள் கூட பதுங்கு குழிகளில் மறைந்து வாழும் அவலம் நீடித்து வருகிறது.
தேர்தல் முடிவில் மத்தியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆதரவுடன் தான் ஆட்சி அமையும். ஏன் பிரதமராகும் தகுதி அவருக்கு தான் உள்ளது என்று என்னால் அடித்து கூற முடியும். எனவே தமிழர்களை கொன்று குவிக்கும் கரை படிந்த காங்கிரஸ் சின்னத்துக்கு பாடம் புகட்டும் வகையிலும் நாட்டில் நல்லாட்சி அமைந்திடவும் இலங்கை தமிழர்களை பாதுகாத்திடவும் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளாக ஆட்சி செய்த தி.மு.க. அரசு தமிழ்நாட்டில் மின் வெட்டை ஏற்படுத்தி மக்களை பெரும் கஷ்டத்துக்கு ஆளாக்கியது.
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் விலைவாசி விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்து விட்டது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா பெற்று தந்த அனுமதியை தி.மு.க. அரசு பாதுகாக்க தவறிவிட்டது.
இதனால் நமது உரிமை பறிக்கப்பட்டதுடன் லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது நாட்டில் உள்ள நதிகளில் இருந்த மணல் சுரண்டப்பட்டு கோடி கோடியாக கொள்ளையடிக்கப்படுகிறது. மத்திய அரசு உருவாக்கி உள்ள புதிய பொருளாதார கொள்கைகளால் வியாபாரிகளின் தலைக்கு மேல் கத்தி தொங்கி கொண்டிருக்கிறது. இதனால் 4 கோடி குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் வைகோ.