சென்னை வாலிபரின் பலே மோசடி-போலி பெண் டாக்டருக்கு வலை
சென்னை: மனித உரிமை ஆணையத்தின் பெயரைப் பயன்படுத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த போலி பெண் டாக்டருக்கு வலை வீசப்பட்டுள்ளது.
சென்னை கொளத்தூர் சிவானந்தம் நகரை சேர்ந்தவர் சரவணன் கருப்பசாமி (34). எம்.ஏ. படித்தவர். உலக மனித உரிமை ஆணையத்தின் தலைமை செயல் அலுவலர் என்று தன்னை கூறிக் கொண்டு பெரிய அளவில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார் கருப்பசாமி.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக ஊழியரை ஏமாற்றி அங்குள்ள விருந்தினர் மாளிகையில் அறை எடுத்து பலமுறை தங்கியுள்ளார். உலக மனித உரிமை ஆணையத்தின் செயல் அலுவலர் என்று பிரஸ் மீட்டும் செய்துள்ளார்.
மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக சேர்த்து விடுவதாக சொல்லி கோவை பகுதியில் ஏகப்பட்ட பேரிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு நாமம் போட்டுள்ளார்.
இந்த நிலையில் கருப்பசாமியின் மோசடி வேலைகள் அம்பலமாகவே அவர் மீது கோவை போலீஸில் புகார்கள் குவிந்தன.
மனித உரிமை ஆணையத்தின் சார்பிலும் தனியாக போலீஸ் டி.ஜி.பி. ஜெயினிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இதையடுத்து கோவை சிபிசிஐடி போலீஸார் கருப்பசாமி மீது வழக்குப் பதிவு செய்தனர். கருப்பசாமியை வளைத்துப் பிடிக்க கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் உத்தரவிட்டார்.
அதன்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தப் படையின் வேட்டையில் கருப்பசாமி சிக்கிக் கொண்டார். அவரைக் கைது செய்துள்ள போலீஸார், அவருக்கு உடந்தையாக போலி பெண் டாக்டரான சக்தி என்பவரும் இருந்துள்ளார் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
சக்தி போலி டாக்டர் என்பதே சரவணனுக்குத் தெரியாதாம். தன்னை டாக்டர் என்று கூறி, சரவணன் கருப்பசாமியிடம் அவர் செயலாளராக பணியாற்றியுள்ளார்.
சரவணன் செய்து வந்த மோசடியில் சக்திக்கும் பங்கு போயுள்ளதாம். அவரும் உதவியாக இருந்துள்ளார். இதையடுத்து சக்தி மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் தற்போது தலைமறைவாகி விட்டார். சக்தியையும் பிடிக்க போலீஸார் வலை விரித்துள்ளனர்.
கருப்பசாமியிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அதுகுறித்த தகவல்களை தெரிவிக்கலாம் என்று கோவை சிபிசிஐடி போலீஸார் அறிவித்துள்ளனர்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்
- 0422-2303302.
- 9994277774.












Click it and Unblock the Notifications