கருணாநிதியை பார்க்க சென்னை வந்தார் பிரதமர்
சென்னை: முதல்வர் கருணாநிதியை சந்திப்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் இன்று பிற்பகல் சென்னை வந்தார். கருணாநிதியைப் பார்த்து விட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்று விட்டு அவர் உடனடியாக டெல்லி திரும்பிச் செல்கிறார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை சென்னை வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று சென்னை வந்தார். ஆனால் அவர் பிரசாரக் கூட்டம் எதிலும் பங்கேற்க மாட்டார் என ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை வந்தார் பிரதமர். பின்னர் கன்னிமாரா ஹோட்டலுக்கு சென்றார். அங்கு செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ வழி செய்வோம் என்றார்.
பின்னர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரிக்கச் சென்றார். இதையடுத்து அவர் டெல்லி திரும்புவார்.
பிரதமர் வருகையையொட்டி அவர் செல்லும் இடங்களில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விமான நிலையம், ஹெலிகாப்டரில் அவர் வந்து இறங்கும் துறைமுகத்தில் உள்ள கப்பல் படை தளம், கன்னிமாரா ஹோட்டல், அப்பல்லோ மருத்துவமனை ஆகிய இடங்கள் பலத்த பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இந்த பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்துகிறார்கள். பிரதமர் கடற்படை தளத்தில் இருந்து கன்னிமாரா ஹோட்டலுக்கு செல்லும் வழி நெடுகிலும், கன்னிமாராவிலிருந்து அப்பல்லோ மருத்துவமனை செல்லும் வழியிலும் போலீசார் அரண்போல பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
பிரதமர் செல்லும் போது வழியில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் செல்லும் வழியில் இருக்கும் ரோடுகளில் குப்பைத் தொட்டிகள்கூட அகற்றப்பட்டுள்ளன.
பிரதமர் குண்டு துளைக்காத காரை பயன்படுத்துகிறார். பிரதமர் செல்லும் வழியில் நேற்று மாலை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பாதுகாப்பு ஒத்திகை செய்து பார்க்கப்பட்டது.
முதல்வர் தவிர அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் ஆளுநர் பர்னாலா, ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன் ஆகியோரையும் பிரதமர் சந்திக்கிறார்.