பாஜக ஆட்சிக்கு வந்தால் சமத்துவம் உண்டாகும் - சரத்குமார்
நெல்லை: இந்தியாவில், சமத்துவம் மற்றும் சமதர்மம் என்ற புதிய சமுதாயம் உருவாக பாஜக ஆட்சி மலர வேண்டும் என்று நெல்லை தொகுதியில் நடந்த பிரசாரத்தில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேசினார்.
நெல்லை தொகுதி ச.ம.க. வேட்பாளர் கரு.நாகராஜனை ஆதரித்து சரத்குமார் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,
மத்தியில் வலிமையான ஆட்சி வரவேண்டும் என்றால் பாஜக ஆட்சி வரவேண்டும். பாஜக ஆட்சியில்தான் பொருளாதார நெருக்கடி கட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து கிராமங்களையும், நகரங்களையும் இணைக்கும் வகையில் நான்கு வழி சாலை அமைக்கப்பட்டது. மேலும் மக்களுக்கு கல்வி, சுகாதாரம், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பாஜ ஆட்சியில்தான் கிடைத்தது.
சமத்துவம், சமதர்மம் என்ற புதிய சமுதாயம் உருவாக பாஜக ஆட்சி மலர வேண்டும். டாக்டர்கள் மற்றும் இன்ஜினியரிங் படிப்புகள் இலவசமாக வழங்கப்படும்.
மேலும் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் கல்வியில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும். பாஜக தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டு வருகிறது என்றார் சரத்குமார்.
சரத்குமார் பிரசாரத்தில் தேர்தல் விதிமுறையை மீறி அனுமதியில்லாமல் 2 வாகனங்கள் செல்வதாக கூறி அவற்றை போலீசார் மருதகுளத்தில் பிடித்தனர். இதனால் போலீசாருக்கும், ச.ம.க. நிர்வாகிகளுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் சரத்குமார், நான்குநேரி டிஎஸ்பி சிதம்பரநாதன், இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆர்வ மிகுதியால் தொண்டர்கள் தெரியாமல் காரில் வந்து விட்டனர். அதனால் அவர்களை எச்சரித்து வாகனங்களை விட்டு விடுங்கள் என்றார் சரத்குமார்.
இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் வாகனங்களை விடுவிப்பதாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications