துளசி வாசம் மாறும், தவசி வாக்கு மாற மாட்டான் -விஜயகாந்த் பிரசாரம்
பண்ருட்டி: துளசி வாசம் மாறினாலும் மாறும். ஆனால், இந்த தவசி வாக்கு மாறமாட்டான் என தன் பட வசனத்தை தானே பேசி பன்ருட்டி தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார் விஜயகாந்த்.
கடலூர் தொகுதியில் தேமுதிக சார்பில் எம்.சி.தாமோதரன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அவரது தம்பி எம்.சி.சம்பத் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அப்பகுதியி்ல் சூராவளி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
கடலூர் தொகுதிக்கு உட்பட்ட பன்ருட்டி பேருந்து நிலையம் அருகில் விஜயகாந்த் பேசுகையில்,
கலைஞரும், ஜெயலலிதாவும் தங்களது ஆட்சி காலத்தில் விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஜெயலலிதா எல்லா கூட்டங்களிலும் ஆட்களை கூட்டி வருகிறார். நான் கூட திருவண்ணாமலையில் நடந்த கூட்டத்தை கண்ணால் பார்த்தேன்.
ஏதோ பணம் கொடுப்பதாக கூறுகிறார்கள், ஆனால் எவ்வளவு பணம் என்று தெரியவில்லை? சாப்பாடு பொட்டலம் கொடுக்கிறார்கள். அதற்குள் பிரியாணி இருப்பதாக கூறுகிறார்கள். இவ்வளவு கொடுக்கிறார்களே அதற்கு என்ன அர்த்தம். இந்த நாட்டில் வறுமை இன்னும் இருக்கிறது என்பதுதான்.
பணத்துக்கு அடிபணியமாட்டேன்...
நான் தெய்வத்தோடும், மக்களோடும் தான் கூட்டணி. அதில் இருந்து நான் மாறவில்லை. துளசி எவ்வளவு வாசம் மாறினாலும் மாறும் இந்த தவசி வாக்கு மாறமாட்டான். இதுநாள் வரைக்கும் நான் அப்படித்தான் இருக்கிறேன். பணத்துக்கு நான் அடிபணியவில்லை.
கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய மூன்று கட்சிகளும் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை வாங்கி தரமாட்டார்களாம். ஆனால் அவர்களுக்கு ஓட்டு மட்டும் தவறாமல் போடணுமாம். தமிழ்நாட்டு விவசாயிகள் என்ன ஏமாளிகளா?
கோதுமைக்கு ஆயிரம் ரூபாய் வாங்கி கொடுக்கிறீர்கள். இங்குள்ள நெல்லுக்கும், கரும்புக்கும் கூடுதல் விலை கேட்டார்களே, நீங்கள் வாங்கி கொடுத்தீர்களா? நாங்கள் மட்டும் உங்களுக்கு 40 தொகுதிகளிலும் வெற்றியை தர வேண்டும். ஆனால் நீங்கள் மட்டும் ஒன்றும் செய்யமாட்டீர்கள்.
கூழ் குடிக்க உப்பு கொடுங்கள்...
ஒவ்வொரு சீசனிலும் புதிய டிசைன் துணிகள் வரும்போது பழைய துணியை மாற்றிவிட்டு புது துணியை அணிவதுபோல் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் மாற்றிப் பாருங்கள். அவர்கள் காப்பி குடிக்க சர்க்கரை கேட்கிறார்கள். நான் கூழ் குடிக்க உப்புதான் கேட்கிறேன்.
யார் நல்லது செய்வார்கள் என்று பார்த்து ஓட்டு போடுங்கள். நல்ல கட்சியை தேர்ந்தெடுங்கள். நல்ல கட்சி என்று தப்பான கட்சியை தேர்ந்தெடுக்கக்கூடாது. மக்களுக்கான நல்ல கட்சி தேமுதிக தான்.
இந்த பிரசாரத்தோடு நீங்கள் இருந்துவிடக்கூடாது. போகும் இடங்களில் எல்லாம் முரசுக்குத்தான் ஓட்டு என்று சொல்லவேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் 100 ஓட்டுகளை வாங்கி தரவேண்டும்.
ஆட்சி மாற்றத்தை கொடுங்கள் 40 தொகுதிகளிலும் எனக்கு வெற்றியை கொடுத்தால் டெல்லியில் அப்புறம் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications