தமிழகம், புதுவையில் நாளையுடன் ஓய்கிறது பிரசாரம்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளையுடன் லோக்சபா தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதையடுத்து தலைவர்களின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 13ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த அனல் பறக்கும் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் முடிவுக்கு வருகிறது. அதன் பின்னர் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது. வீடு வீடாக சென்று அமைதியான முறையில் வாக்கு கேட்கலாம்.
பிரசாரம் நாளையுடன் முடிவுக்கு வருவதையடுத்து அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
இன்று முடிக்கிறார் ஜெ..
அதிமுக கூட்டணி்க்கான பிரசாரத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்றுடன் நிறைவு செய்கிறார். இன்று மாலை சேப்பாக்கத்தில் அவர் கடைசியாக பிரசாரம் செய்து தனது தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொள்கிறார்.
பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்து முடித்துவிட்டார்.
தேர்தல் களத்தில் நிற்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிவகாசியிலும், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன் வடசென்னையிலும் முகாமிட்டுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் வரதராஜன் மதுரையில் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் தமிழகத்தை ஒரு சுற்று சுற்றி முடித்து விட்டார்.
இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சென்னையில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அவருடன் முதல்வர் கருணாநிதியும் கலந்து கொண்டு பேசுகிறார்.
பாஜக சார்பில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்கள் பிரசாரம் செய்துள்ளனர்.
நாளையுன் தேர்தல் பிரசாரம் முடிவதையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.