3வது அணியிலிருந்து பாஜகவுக்கு தாவிய டிஆர்எஸ்.. அடுத்தது ஜெ.!
காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக இடதுசாரிகள் உருவாக்கிய மூன்றாவது அணியில் அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சி, தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, மதசார்பற்ற ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்தன.
தேசியவாதக் கட்சியின் தலைவர் சரத்பவார் அங்கும் இங்குமாக காங்கிரஸ்-மூன்றாவது அணிக்கு இடையே அல்லாடிக் கொண்டுள்ளார்.
இந் நிலையில் ஆந்திராவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடந்தது. இதில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி 9 இடங்களில் போட்டியிட்டது.
இப்போது வாக்கு எண்ணிக்கைக்காக அந்த மாநில வேட்பாளர்கள் காத்துக் கொண்டுள்ள நிலையில் அரசியல் ஹைஜம்ப் செய்துள்ளது ராஷ்ட்ரீய சமிதி.
அக் கட்சி மூன்றாவது அணியிலிருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. இதன்மூலம் மூன்றாவது அணியில் இருந்ததால் தன்னை நம்பி வாக்களித்த மக்கள் நெற்றியில் பட்டை நாமம் பூசியுள்ளார் அக் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ்.
ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதாக பாஜக உறுதி அளித்துள்ளதால் தான் அணி மாறியதாக தெரிவி்த்துள்ளார்.
இப்போது பாஜக கூட்டணியில் பஞ்சாப்பில் அகாலிதளம், உத்தரப் பிரதேசத்தில் அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோக்தளம், மகாராஷ்டிரத்தில் சிவசேனா, ஹரியாணாவில் ஓம்பிரகாஷ் செளதாலாவின் இந்திய தேசிய லோக்தளம், அஸ்ஸாம் கண பரிஷத், பிகாரில் ஐக்கிய ஜனதா தளம், ஆந்திராவில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆகிய கட்சிகள் உள்ளன.
இந் நிலையில் மூன்றாவது அணியில் உள்ள ஜெயலலிதாவும் தேர்தல் முடிவுக்குப் பின் பாஜக கூட்டணிக்கு வந்துவிடுவார் என்பது அக் கட்சியினர் மத்தியில் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
அந்த நம்பிக்கையை ஜெயலலிதாவும் பொய்யாக்க மாட்டார் என்றே தெரிகிறது. ஜெயலலிதாவை கூட்டணிக்குள் கொண்டு வரும் வேலைகளில் அவருக்கு மிக நெருக்கமான குஜராத் முதல்வர் நரேந்திர மோடி போன்றவர்கள் ஈடுபட்டுள்ளனர்.