தேர்தல்-குற்றாலத்தில் வீடு வீடாக போலீசார் சோதனை
குற்றாலம்: நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஒரு நாட்கள் மட்டுமே இருப்பதால் குற்றாலம் பகுதியில் தங்கியிருக்கும் வெளியூர்காரர்களை வெளியேற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக வீடு வீடாக சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 13ம் தேதி நடக்கிறது. இன்று மே 11ம் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இதையடுத்து அனைத்து கட்சியினரும் உச்சகட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தேர்தல் அமைதியாக நடக்க கூடுதல் பாதுகாப்புக்காக போலீசாருடன் துணை ராணுவ படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தென்காசி தொகுதிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, அவை குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட உள்ளது.
அங்கு வரும் 16ம் தேதி வாக்குஎண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் மட்டுமே முழுமையாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பகுதியான குற்றாலத்தியில் இருக்கும் வெளியூர்காரர்களை வெளியேற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் குற்றாலம் ராமலாயம் பகுதி வீடுகளில் போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினர். வெளியூர்களில் இருந்து யாராவது வந்து தங்கியுள்ளார்களா, சந்தேகப்படும்படி யாராவது இருக்கிறார்களா என வீடுகளிலும், லாட்ஜ்களிலும் போலீசார் சோதனை நடத்தினர்.