கரூர் அரசு பிஆர்ஓவுக்கு செருப்படி-கண்டக்டர் கைது
கரூர்: கரூர் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அதிகாரி செந்தில்குமாரை செருப்பால் அடித்த மினி பஸ் நடத்துனரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பவர் செந்தில் குமார். இவர் நேற்று இரவு கரூர் நகர பகுதியில் இருந்து ரயில்வே நிலையம் செல்ல வேகமாக சென்ற மினி பஸ்சில் ஏறியுள்ளார்.
அப்போது மினி பஸ் நடத்துனர் ரமேஷ் என்பவருக்கும், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி செந்தில்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு அது கைகலப்பாக மாறியது.
இதனையடுத்து ஆவேசம் அடைந்த மினி பஸ் நடத்துனர் ரமேஷ், கரூர் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அதிகாரி செந்தில் குமாரை தனது காலில் போட்டிருந்த செருப்பை கழற்றி சரமாரியாக அடித்தார்.
இது குறித்து செந்தில் குமார், கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மினி பஸ் நடத்துனர் ரமேசை கைது செய்தனர்.